Tuesday, April 11, 2017

Maharishis messenge April 11

Maharishis messenge April 11

🌷வாழ்க்கை மலர்கள்🌷

ஏப்ரல் 11

வாழ்க்கைத் துறைகள்

சுகாதாரம்

உடலின் உற்பத்தி, இயக்கம், வளர்ச்சி, தளர்ச்சி என்ற இவைகளினாலும், கருவமைப்பு, ஆகாரம், செயல்கள், எண்ணங்கள் என்ற இவைகளினாலும், வெட்ப தட்ப தாக்குதல், சந்தர்ப்ப மோதல் என்ற இவைகளாலும், நம் உடல் இரசாயணங்கள் மாற்றமடைகின்றன. இவைகளால் நம் உடல் இரசாயணங்கள் அளவிலும், செறிவிலும் குறைந்து விடுகின்றன; அல்லது அதிகரித்து விடுகின்றன. அவைகளால், இரத்த ஓட்டச் சுழலின் தன்மையும், அதனால் ஏற்படும் உடலியக்க, அறிவியக்க நிலைகளும் மாற்றமைடைந்து விடுகின்றன. இத்தகைய மாற்றங்களைச் செயற்கை முறைகளினால் தகுந்தபடி சமநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியே மருத்துவமாகும். அளவுக்கு மிஞ்சி ஏற்பட்டிருக்கும் ரசாயன அதிகரிப்பையும், இரத்த ஓட்டத்தையும், அழுத்தத்தையும் அளவுக்குக் குறைந்துபோன இரசாயனக் குறைவையும், இரத்த ஓட்டத் தளர்ச்சியையும் – மருந்து, உணவு, பட்டினி, நீராடல், ஓய்வு, உடற்பயிற்சி முதலியவற்றால் சமநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியே சுகாதார முறை எனப்படும்.

பொருளாதாரம்

மனிதர் வாழ்வதற்கு அவசியமான உணவு, இடம், உடை முதலியவைகளையும், இயற்கையில் ஏற்படும் துன்பங்களை எதிர்க்கும் பல வசதிகளையும் உற்பத்தி செய்தல், சேமித்தல், பாதுகாத்தல், நிரவுதல், அனுபவித்தல் என்பன எல்லாம் சேர்ந்த ஒன்றே பொருளாதாரம் எனப்படும்.

அரசியல்

பொதுவாக எல்லோருக்கும் வாழ்க்கையின் இன்பத்தைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும், துன்பத்தைக் குறைக்கவும் – போக்கவும், திட்டமிட்டுச் செயலாற்றவும், தனி மனிதனால் ஆகாத காரியத்தைப் பலரின் சக்தி கொண்டு நிறைவேற்றவும், பலமுடையான் பலமில்லாதவனைத் துன்புறுத்தாதபடி பாதுகாக்கவும், ஏற்படுத்திக் கொண்ட கூட்டு வாழ்க்கை ஒப்பந்தமே – கட்டுப்பாடு விதிமுறைகளே அரசியல்.

விஞ்ஞானம்

விண் என்றால் அணு. ஞானம் என்றால் அறிவு. விஞ்ஞானம் விண்+ஞானம் அணுவின் தத்துவம் அறிந்து கொண்ட அறிவின் தெளிவே விஞ்ஞானம். அணுவையும், அணுவின் தத்துவத்தையும் அறிந்தால், அணுவில் உள்ள எழுச்சி கவர்ச்சி எனும் சக்தியை அறியலாம், அணுக்கள் ஒன்றுடன் ஒன்று, பலவுடன் பல கூடுவதால் உருவங்களும் அவற்றில் காந்த சக்தியும் ஏற்படுகின்றது, அந்தக் காந்த சக்தியே ஒலியாய், ஒளியாய், வெப்ப தட்ப மாறுபாடுகளாய், குவிதல், பரவுதல், கவர்தல், விலகுதல், கூடுதல், பிரிதல் என்னும் பல்வேறு இயக்கங்களாகி, அதன் விளைவாக ஒவ்வொரு பொருளிலும் இரசாயனம் தோன்றி கூடி – குறைந்து – மாறி உருவங்களாய், பொருட்களாய், ஜீவராசிகளாய் உருவாகி இருக்கும் இயல்பறிந்து கொள்வதே விஞ்ஞானம் எனப்படும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment