Saturday, April 30, 2016

ஒரு உண்மையான.... இறைபக்திக்கு எது முக்கியம

ஒரு உண்மையான....
இறைபக்திக்கு எது முக்கியம்?

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும்
வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம், முனிவரே! என
வணங்கினர் அம்மையும் அப்பனும்.

முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் 'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,

முனிவர் சிரித்தார். வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது
வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

நீதி!

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர் களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.

பிறவி நோய் நீங்கும் வழி

பிறவி நோய் நீங்கும் வழி
" கல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே "

இந்து சைவ மதத்தின் சின்னங்களான விபூதி, ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள  வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், " வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது.    " உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா  நமச்சிவாயவே " என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட   உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா?

நம்முடைய திருமுறைகளில் பெரும்பாலனவை வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டுள்ளன. வினை கழிய என்ன செய்வது என்று நமது அருளாளர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அது கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுவதே ஆகும். கைவினை செய்தல் என்றால், திருக்கோவில்களில் அலகிடுதல், மெழுகுதல், பூப்பறித்து பூமாலை சாற்றுதல், பாமாலை பாடுதல், தலையார கும்பிடுதல், கூத்தாடுதல், போன்ற தொண்டுகளை செய்து இறைவன் திருவடியை போற்றி பரவுதன் மூலம் வினைப்பயின்று இன்னும் பிறவாமை என்ற  நீக்கம் பெறலாம், எ்னபது தெளிவு், நாம் இந்த மானிடப்பிறப்பு பிறந்ததன் பயன் பெற உடலுறுப்புக்ள நலமடையவும், நம் உடல் உறுப்புக்ளால் வழிபாட்டிற்கு எவ்வாறு பயன்பட செய்ய வேண்டும் என்று திருமுறைகள் கூறுவதைப் பார்ப்போம்.
யாக்கை ஆகிய நம் உடம்பு இறைவன் நிமித்தம் பயன்பாட்டுத்தன்மை எத்தகையது என்பதை திருமுறைகள் காட்டும் நெறி
தலை; தலையை தாழ்த்தி வணங்க வேண்டும் " தலையே நீ வணங்காய் .............. தலைவனை " ,,,,, அப்பர்
" சிரங்குவிவார் ஓங்குவிக்கும் ......... "  சிவபுராணம்
கண்கள் ;  கண்காள் காண்மின்களோ .... கடல் நஞ்சுண்ட கண்டனை தன்னை ................"   அப்பர் அடிகள்
செவி ; "செவிகாள் கேண்மின்களோ ..... எரிபோல் மேனிபிரானை"
வாய் ; வாயே வாழ்த்து கண்டாய் ..... மதயானை உரிபோர்த்தானை
மூக்கு ; மூக்ேக நீ முரலாய் ..... முது காடுறை முக்கண்ணனை
நெஞ்சு ; நெஞ்சே நீ நினையாய் ....... நிமிர் புன்சடை நின்மலனை
கைகள் ; கைகாள் கூப்பி தொழீர் ....... பாம்பணிந்த பரமனை ஆக்கை (உடல்) ; ஆக்கையால் பயன் என் ..... அரன் கோவில் வலம் வருதல்
கால்கள் ; கால்களால் பயன் ... கோவில்கோபுரங்களை வலம் வரல்

அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தக்கால் கூன், செவிடு, முடம் அற்று பிறத்தல் அரிது. இவ்வாறு ஒச்சமின்றி பிறந்த நம் உடல் ெகாண்டு ஈசனை வணங்க பயன்படுத்தாத இந்த ஆக்கையினால் பயன் என்ன? " உற்றார் ஆர் உளரோ ... உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ " அப்பர்  திருமுறை பாடல்
இதனையே பட்டினத்து அடிகளும் "ஊரும் சதமல்ல , உற்றார் சதமல்ல, ............................... கச்சியப்பா நீ யே சதம் " என்கிறார், எனவே இப்பிறப்பின் பிறவி பயனை அடையவும், இன்னும் பிறவா நிலை பெறவும் நம் பெற்ற ஆக்கையால் ஆலவாய் சுந்தரனை வணங்கி பாடி பிறவி பயன் பெற்று இனி பிறவாத தன்மை வந்து ஏய்தல் வேண்டும்.

சுந்தரரர் இதனையே " ..... பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் ............. " என்னிறார்.

பெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா? அவனை வாழ்த்துவதற்காகவே  மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம்? இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும்  உறங்குவதும்  தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று  மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் (தீவினைகள் ) செய்வதில்லையே! எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன  தவறு?         

" பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் " என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா!

தினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று  அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்? எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.

நாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, "பயிர் காட்டும் புயலாக " விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.
நமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம்  மன அமைதி இழந்து தவிக்கிறோம்.

மொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:

"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்                               
ஒருகாலும் திருக் கோயில் சூழாராகில்
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்
அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்           
பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும்
செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே. "

பிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.

தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
http://www.saliyarkural.in/2016/03/blog-post_97.html

விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்  !

விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்  !!!

விபஸ்ஸனா என்றால் என்ன?
விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது.

விபஸ்ஸனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்று ஆகும். விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, இதை உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தெனவும், இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.

இந்த தியான முறை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, பிரிவையோ சார்ந்திராதது. உள்ளத்தின் மாசுகளை அறவே நீக்கி, மோட்சப் பெருநிலை அடைவதே இந்த தியான முறையின் உயரிய குறிக்கோள். உடல் நோய்களை நீக்குவதோடு நில்லாமல் மனிதர்களின் துன்பங்களை அறவே நீக்கி பூரண சுகம் அளிப்பதே இதன் நோக்கம்.

இது உடம்பிற்கும் மனதிற்கும் உள்ள ஆழமான தொடர்பை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. உடலையும் மனதையும் தொடர்ந்து இணைக்கக்கூடியவை உடலில் தோன்றும் உணர்ச்சிகள். உடலை உயிருள்ளதாக அறியவைப்பதும் உடலில் தோன்றும் உணர்ச்சிகள்தான். அதனால் உடல் உணர்ச்சிகளை நெறிமுறையோடு கவனிப்பதன் மூலம் உடலிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை நேரடியாக அறியமுடிகிறது. தன்னைத்தானே கவனித்து, தன்னைத்தான் ஆராய்ந்து மனதிற்கும் உடலிற்கும் உள்ள பொதுவான வேரை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணம் மனதின் மாசுகளைக் கரைக்கிறது. அன்பும் கருணையும் நிறைந்த மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் எண்ணங்கள், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் சீர்தூக்கி ஆராயும் குணம் எவ்வாறு அறிவியற்பூர்வமான விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பது இந்த தியான பயிற்சி மூலம் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. ஒருவர் எவ்வாறு மேம்படுகிறார் அல்லது பின்நோக்கிச் செல்கிறார், எவ்வாறு ஒருவர் துன்பங்களை ஏற்படுத்துகிறார் அல்லது துன்பங்களிலிருந்து விடுபடுகிறார் ஆகியவற்றின் இயல்பு நேரடி அனுபவத்தின் மூலம் புலனாகிறது. இந்த தியான பயிற்சி மூலம் வாழ்க்கையில் கூடுதலான பிரக்ஞை, மாயையின்மை, சுய-கட்டுப்பாடு மற்றும் அமைதி ஆகியவை வாய்க்கின்றன.

இவை அல்ல விபஸ்ஸனா

இது கண்மூடித்தனமான ஒரு சடங்கோ, வழக்கோ அல்ல
இது அறிவை வளர்க்கும் ஓர் ஆட்டமோ, தத்துவ விளையாட்டோ அல்ல
இது ஓய்வு எடுக்கவும், விடுமுறையைக் கழிக்கவும், பலரைச் சந்தித்து பழகவும் ஏற்பட்ட ஒரு வாய்ப்பு அல்ல.
இது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓட ஒரு வழியும் அல்ல

இதுதான் விபஸ்ஸனா

இது மனத்துயர்களை வேரோடு அழிக்கும் ஒரு வழிமுறை ஆகும்
இது சமுதாயத்திற்கு நற்பணிகள் ஆற்ற உதவும் வாழும் கலை ஆகும்
இது வாழ்வின் இன்னல்களை அமைதியுடனும் சமநோக்குடனும் எதிர்கொள்ளும் வண்ணம் மனதைத் தூய்மைப்படுத்தும் முறை ஆகும்

பாரம்பரியம்

விபஸ்ஸனா புத்தபெருமான் காலத்திலிருந்து தொடங்கி இடையீடின்றி வழிவழியாக ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு இன்று வரை நிலைத்துள்ளது.

இதன் தற்போதைய ஆசிரியர் திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்களின் மூதாதையர்கள் இந்தியர்களாக இருந்த போதிலும், இவர் மியன்மார் (பர்மா) நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இருக்கையில் அவர், உயர் அரசாங்க அதிகாரியாக பதவி வகித்து வந்த சயாக்யி ஊ பா கின் அவரிடம் விபஸ்ஸனா பயிலும் நல்வாய்ப்பைப் பெற்றார். தம் ஆசிரியரிடம் பதினான்கு ஆண்டு காலம் பயின்ற பின், 1969 ஆண்டு முதல் அவர் இந்தியாவில் தங்கி விபஸ்ஸனா பயிற்றுவித்து வருகிறார். கீழை மற்றும் மேலை நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன-மத பாகுபாடின்றி அவரிடம் பயின்று வந்துள்ளனர். விபஸ்ஸனா பயில பெருமளவில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்து அவர் 1982 முதல் தனக்கு உதவியாக துணை-ஆசிரியர்களையும் நியமித்து வந்துள்ளார்.

குறிக்கோள்

விபஸ்ஸனா தன்னைத் தானே ஆராய்வதின் மூலம் மனத்தூய்மை அடைய ஒரு வழி. ஒருவர் முதலில் தம் மூச்சுக்காற்றின் மீது கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துகிறார். பின் கூர்மையடைந்த மனதுடன் தன் உடல் மற்றும் உள்ளத்தில் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்து, அதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிகிறார். இவ்வாறு பேருண்மையை நேரடியாக உணர்ந்தறிவதில் மனம் தூய்மை அடைகிறது.

மனமாசுகளிலிருந்து முழு விடுதலை அடைதலும், அகத்தெளிவு பெறுதலும் விபஸ்ஸனா தியான முறையின் உயரிய குறிக்கோள்கள் ஆகும். உடற்பிணிகளை நீக்குவது இதன் நோக்கமல்ல. ஆயினும் மனம் தூய்மை அடைவதன் பயனாக மனநிலை சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமடைகின்றன. சொல்லப்போனால், விபஸ்ஸனா மனத்துயர் எழக் காரணமான விருப்பு, வெறுப்பு, அறியாமை என்ற மூன்றையுமே அழிக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் இந்தத் தியான முறை அன்றாட வாழ்வில் ஏற்படும் மன-இறுக்கத்தைத் தளர்த்துகிறது. விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க சந்தர்ப்பங்களை சந்திக்க நேரும்போது சமநிலை இழக்கும் மனதின் பழைய பழக்கத்தினால் விளைந்த முடிச்சுகளை இது அவிழ்க்கிறது.

யார் பயிலலாம்?

தன்னைத் தானே ஆராய்வதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிந்து மனத்தூய்மை அடைவதே 'விபஸ்ஸனா' முறையாகும். இந்த பாதை முழுக்க முழுக்க அனைவருக்கும் பொதுவானது. யாவருக்கும் பொதுவான நோய்களுக்கு யாவருக்கும் பொதுவான மருந்தாக அமைவது. இது எந்த ஒரு மதத்தையோ, இனப்பிரிவையோ சாராதது. எனவே, இன-குல-மத வித்தியாசங்கள் இன்றி யாவரும் எங்கும் எப்போதும் இதைப் பயிற்சி செய்யலாம். அனைவர்க்கும் இது சம அளவில் பயனளிக்க வல்லது.

இந்த தியான முறையை புத்தர் தோற்றுவித்திருந்தாலும், இதை புத்த மதத்தினர் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற விதி எதுவும் கிடையாது. மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக மக்கள் யாவரும் ஒரே வகையான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் முறையும் அனைவர்க்கும் பொதுவானதாகவே இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டே இந்த தியான முறை செயல்படுகிறது. பல மதங்களை சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் விபஸ்ஸனா முறையின் பயன்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் இந்த தியான முறைக்கும், தம் தொழில் அல்லது சமய நம்பிக்கைகளுக்கும் முரண்பாடு ஏதும் உள்ளதாக கண்டதே இல்லை.

அக-ஆராய்வின் மூலம் மனதை தூய்மைப்படுத்தும் இந்த முறை சுலபமானது அன்று. பயிற்சி பெறுபவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். அவரவர் தம் சொந்த முயற்சியினால் தமக்கே உரிய இயல்புகளை புரிந்துகொள்ள வேண்டி இருக்கும். வேறு யாரும் அவர்களுக்காக இதை செய்ய முடியாது. ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் முயற்சி செய்ய வல்லவர்களுக்கே இந்த முறை ஒவ்வும்.

விபஸ்ஸனா தியான முறை தம் மனம் சார்ந்த குறைபாடுகளை குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையுடன் சில தீவிர மன-நோயாளிகள் இந்தப் பயிற்சி பெற வந்துவிடுகின்றனர். நிலைப்பட்டு பிறருடன் பழக இயலாமை மற்றும் பல்வேறு குணப்படுத்தும் முறைகளை பின்பற்றியதாலான விளைவுகள் ஆகியவை இத்தகைய நோயாளிகள் பயனடைவதைக் கடினமாக்குகின்றன. சிலருக்கு பத்து நாட்கள் பயிற்சியை முடிப்பதுகூட கடினமாக உள்ளது. நாங்கள் தொழில் அடிப்படையில் இன்றி, தாங்களாகவே முன்வந்து சேவை புரிபவர்களைக் கொண்டே பயிற்சி முகாம்களை நடத்துவதால் இத்தகைய பின்னணி கொண்ட பிணியாளர்களை முறைப்படி கவனித்துக் கொள்வது இயலாததாகிறது. விபஸ்ஸனா தியான முறை பெரும்பாலானவர்களுக்கு நற்பயன் விளைவிக்கக் கூடியதே ஆயினும், அது மருத்துவ அல்லது மனச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. எனவே, நாங்கள் தீவிர மன-நோயாளிகளுக்கு இந்த முறையை அறிவுறுத்துவதில்லை.

பயிற்சி முறை

இந்த தியான முறை பத்து-நாள் பயிற்சி முகாம்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அது சமயம் பயிற்சி பெறுவோர் பயிற்சி பெறும் இடத்திலேயே தங்கியிருந்து, பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்க நெறியை தவறாது பின்பற்றி, தியான முறையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, முறையாகவும், தேவையான அளவும் பயிற்சி செய்ய பத்து நாட்களுக்குள்ளேயே நற்பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பர்.

பயிற்சி பெறுவோர் ஈடுபாட்டுடன் கடுமையாய் பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். மூன்று நிலைகளை கொண்டது இந்த பயிற்சி. 'சீல', அதாவது நன்னடத்தை, என்பதே இந்த முறையின் அடித்தளம் ஆகும். சீலத்தின் அடிப்படையில் எழும் மன-ஒருநிலைப்பாட்டிற்கு 'சமாதி' என்று பெயர். அக-ஆராய்வினால் விளையும் ஞானத்திற்கு 'பஞ்ஞ' என்று பெயர். இந்த ஞானத்தின் மூலமே ஒருவர் மனத்தூய்மை அடைகிறார்.

முதன்மையாக, பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் எந்த உயிரையும் கொல்லுவது, எந்த பொருளையும் திருடுவது, பாலியல் உறவுகள் கொள்வது, தவறாக பேசுவது மற்றும் போதை ஊட்டும் பொருட்களை உட்கொள்வது ஆகிய செயல்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இந்த எளிய அறநெறி, உள்ளத்தை அமைதிபடுத்தப் பெரிதும் உதவுகிறது. இல்லையேல், தெளிவாகத் தன்னைத் தான் கவனிக்க இயலாது மனம் அலைபாய்ந்துகொண்டு இருக்கும்.

ஒருவர் இடைவிடாது தன் மூச்சுக்காற்றின் போக்கின் மீது தன் முழு கவனத்தையும் நிலைநிறுத்தி, அதில் இயல்பாக நிகழும் பல மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் தன் மனதின் மேல் உள்ள கட்டுப்பாட்டை ஓரளவு வளர்த்து கொள்வது இரண்டாம் நிலை.

நான்காம் நாள் வருவதற்குள் மனம் பெரிதும் அமைதி பெற்று, கூர்மையுற்று விபஸ்ஸனா பயிற்சி தொடங்கத் தேவையான திறனை அடைகிறது. உடலெங்கும் புலனாகும் உணர்ச்சிகளை உணர்ந்தறிந்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஏற்படுத்தாது, சமநோக்கை வளர்த்துக்கொள்வதே இந்த பயிற்சி.

இறுதியாக, கடைசி நாள் அன்று, பத்து நாட்களில் பெருகிய மனத்தூய்மையை அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் அனைவரிடமும் நல்லுறவு வளர்க்கும் 'பேரன்பு தியான முறை' பயிற்சியுடன் முகாம்கள் நிறைவடையும்.

மூச்சு மற்றும் உடலோடு இணைந்த உணர்ச்சிகளை கவனிக்கும் செயல்முறை பற்றிய சிறு விடியோ படம் (5.7 மெகா பைட்டுகள்) 'க்விக்டைம் மூவி ப்ளேயர்' துணைகொண்டு காணலாம். இம்முழுபயிற்சியும் உண்மையிலேயே மனதிற்கு தரப்படும் பயிற்சியாகும். நாம் உடல் நலம் பெற உடற்பயிற்சி செய்வதைப்போன்றே, மனநலம் பெற செய்யும் பயிற்சியே விபஸ்ஸனா தியான முறை ஆகும்.

கால அட்டவணை
பயிற்சியின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு பின்வரும் கால அட்டவணை வரையப்பட்டுள்ளது. சிறந்த பயனை பெற மாணவர்கள் முடிந்தவரை இந்த அட்டவணைப்படி தவறாது காலத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 04.00 மணி விழித்தெழுதல்
காலை 04.30 முதல் 06.30 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 06.30 முதல் 08.00 வரை காலைச்சிற்றுண்டி இடைவேளை
காலை 08.00 முதல் 09.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
காலை 09.00 முதல் 11.00 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 11.00 முதல் நண்பகல் 12.00 வரை பகல் உணவு
நண்பகல் 12.00 முதல் மாலை 01.00 மணி வரை ஓய்வு அல்லது ஆசிரியருடன் நேர்காணல்
மாலை 01.00 முதல் 02.30 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 02.30 முதல் 03.30 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 03.30 முதல் 05.00 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 05.00 முதல் 06.00 வரை தேநீர் இடைவேளை
மாலை 06.00 முதல் 07.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 07.00 முதல் இரவு 08.15 வரை தியானக்கூடத்தில் ஆசிரியரின் பேருரை
இரவு 08.15 முதல் 09.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
இரவு 09.00 முதல் 09.30 வரை தியானக்கூடத்தில் கேள்வி நேரம்
இரவு 09.30 மணி தங்கும் அறைக்குச் செல்லுதல்; விளக்கணைப்பு

நிதியளித்தல்

விபஸ்ஸனா பயிற்சி பெற எந்த விதமான கட்டணமும் கிடையாது. உணவும், இருப்பிடமும் கூட இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. விபஸ்ஸனா முறையின் பாரம்பரியப்படி பயிற்சி முகாம்கள் நன்கொடைகளை மட்டும் கொண்டு நடத்தப்படுகின்றன. திரு சத்திய நாராயண் கோயன்கா அவரிடமோ அல்லது அவர்தம் உதவி ஆசிரியரிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதன் முறையாக பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஒருவர், முகாமின் கடைசி நாள் அன்றோ, அதன் பின்னரோ நன்கொடை வழங்கலாம்.

இந்த முறையில், பயிற்சியின் பயனை தாமே சொந்தமாக உணர்ந்தவர்களே மேலும் பயிற்சி முகாம்கள் நடக்க வழிவகுக்கிறார்கள். தாம் பெற்ற பயனை பிறருக்கும் அளிக்கும் வகையில் மனமுவந்து தம்மால் இயன்றதைக் கொடுக்கலாம். முதல் முறையாக பயிற்சி பெறுபவர்கள், பயிற்சியின் முடிவிலோ அல்லது அதன்பிறகு எப்பொழுதுமோ நன்கொடை வழங்கலாம்.

இவ்வாறு வரும் நன்கொடைகள் மட்டுமே உலகம் முழுவதும் இந்த பாரம்பரியத்தின் கீழ் நடக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான ஒரே வருவாய். செல்வந்தர்களான எந்த நிறுவனமோ தனிப்பட்டவரோ இந்த பயிற்சி முகாம்களுக்கு உபயம் செய்வதில்லை. மேலும், இதன் ஆசிரியரோ நிர்வாகிகளோ எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை. இவ்வாறாக, விபஸ்ஸனா நோக்கத் தூய்மையுடன் பொருள் ஈட்டும் குறிக்கோள் எதுவும் இன்றி பரவி வருகிறது.

நன்கொடை பெரியதாகினும், சிறியதாகினும், 'எனக்கு முன்னால் பயிற்சி பெற்றவர்களின் வள்ளன்மையினாலேயே நான் பயிற்சி பெறுவது சாத்தியமாயிற்று; எனக்குப் பின்னால் பலரும் இந்த தியான முறையின் பயன்களைத் அனுபவிக்க நானும் இனிவரும் பயிற்சி முகாம்கள் நடத்தும் பொருட்டு ஏதாவது வழங்குகிறேன்' என்கிற பிறருக்கு உதவும் நல்லெண்ணத்தோடே அளிக்கப்படவேண்டும்.

tamil:http://www.tamil.dhamma.org/Code%20of%20Discipline.htm