Friday, April 17, 2020

MAHARISHI'S THOUGHT APRIL 18

*வாழ்க்கை மலர்கள்: ஏப்ரல் 18*

*பொருளும் நிகழ்ச்சியும்*

நீங்கள் எழுதுவதற்காகப் பேனாவைக் கையில் வைத்திருக்கின்றீர்கள். அதையே நம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். பேனாவைப் பார்த்து இது பொருளா அல்லது நிகழ்ச்சியா என்ற வினா எழுப்புங்கள். கையினால் தொட்டு உணர முடிவதாலும் கண்ணால் பார்த்து உணர முடிவதாலும் பேனா ஒரு பொருள்தான் என்று கருத நேரும்.

மேலே செல்வோம். அந்தப் பேனாவை எரியும் நெருப்பிலிட்டால் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போகும். பேனா என்ற வடிவம் இப்போது அதற்கு இல்லை. பேனா எங்கே? அழிந்து விட்டது. இவ்வாறு அழிவது பொருளாகுமா? பேனா என்னவாயிற்று? ஆராய்வோம். 

நெருப்பிலிட்டவுடன் அதில் இணைந்திருந்த பலதரப்பட்ட அணுக்கள் வெப்பத்தால் கிளர்ச்சியூட்டப் பெற்று இயக்க விரைவு பெற்று ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து போயிற்று. அதனால் அணுக்கள் கூட்டால் அமைந்த பேனா என்ற வடிவம் மறைந்து போயிற்று. எது பேனாவாகக் காட்சியளித்தது? அணுக்கள். பேனா பொருளன்று. அணுக்கள் கூடிய ஒரு நிகழ்ச்சி தான் என்பது விளங்கக் கண்டோம். 

பேனா மட்டுமென்ன? நாம் காணும் இப்பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள், தோற்றங்கள் அத்தனையும் அணுக்களின் கூட்டு இயக்கம் தானே? ஒரு கூட்டுத் தோற்றமாக நாம் காணும் எப்பொருளிலும் ஒவ்வொரு அணுவும் தனித்தனியாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இடையில் உள்ள இடைவெளியைக் காணும் திறமை புலனறிவுக்கு இல்லை.

அதனால் ஒரே கொத்தாக ஒரு தோற்றம் காட்சியாகின்றது. இவ்வாறு இந்த அடிப்படையில் ஆராய்ந்தால் பிரபஞ்சத் தோற்றங்கள் அத்தனையும் நிகழ்ச்சிகளே என்ற முடிவுக்கு வருகிறோம். 

அடுத்து ஒரு வினா. எல்லாத் தோற்றங்கட்கும் அடிப்படைத் துகளான அப்பரமாணு பொருளா? நிகழ்ச்சியா? இதனையும் ஆராய்வோம். அப்பரமாணுவின் இயக்கத்தைக் கழித்து யார் அல்லது எது இயங்குகிறது என்று உணர்ந்து கொள்ளலாமல்லவா? அது தானே பொருளாக இருக்க முடியும்? பரமாணுவின் இயக்கத்தைக் கழித்துப் பார்த்தால் என்ன மிஞ்சும்? ஒன்றுமேயில்லை. வெட்டவெளி தான் மீதி. 

அகன்று நின்று பூரணமாக இருக்கும் வெட்டவெளி என்ற பொருள் தான் நுண்ணிய இயக்கத்தில், கண்ட நிலையில் பரமாணுவாக இருக்கின்றது. இப்போது பொருள்நிலை விளங்குகிறதல்லவா? வெட்டவெளி என்ற ஒரு நிலையே பொருள் நிலையாகும். அதன் இயக்க நிகழ்ச்சியே பரமாணுவாகும். மற்ற தோற்றங்கள் யாவும் பரமாணுக்களின் கூட்டு அல்லது தொடர் நிகழ்ச்சியாகும்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

MAHARISHI'S THOUGHT APRIL 17

*வாழ்க்கை மலர்கள்: ஏப்ரல் 17*

*உவமையின் எல்லை*

உவமையினால் உண்மைப் பொருளை உணர முடியுமா என்றால் உணர முடியாது. உவமையினால் பொருளின் அருகில் போகலாம்; ஆனால் அதை உணர முடியாது. அதனால் தான் வேதாந்தங்களையெல்லாம் உபநிஷத்துக்களாக மாற்றியபோது ”உபநிஷத்து” என்ற பெயர் வந்தது. “உபநிஷத்து” என்றால் “மிக அருகில் கொண்டு போய் வைப்பது” என்பது தான். சேர்த்து விடுவதே தவிர அதுவே உணர்த்திவிட முடியாது. 

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் “இனிப்பு” என்பது எப்படி இருக்கிறது என்ற கேள்வியை போட்டுக்கொள்வோம். “இனிப்பு” என்றால் சர்க்கரை போல் இருக்கும். சர்க்கரை எப்படி இருக்கிறது? கொய்யாப்பழம் மாதிரி இருக்கிறது. இரண்டுக்கும் இனிப்பு என்று சொல்கிறீர்களே என்றால் மொழியில் அவ்வளவுதான் சொல்ல முடியும். இதற்குமேல் இனிப்பு என்பதை எப்படியாகிலும் எடுத்துக்காட்ட முடியுமா? முடியவே முடியாது.

மாம்பழம் எப்படி இருக்கிறது? இனிப்பாக இருக்கும். வாழைப்பழம் எப்படி இருக்கிறது? இனிப்பாக இருக்கும். நூறு பழம் எடுத்தால் நூறு இனிப்பு என்று சொல்லிவிட முடியுமா? இனிப்பு என்ற இடத்தில் ஒன்றாகத்தான் தெரியும். வாழைப்பழ இனிப்புக்கும் மாம்பழ இனிப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்ல இயலுமா? என்றால் இயலாது. அதையெல்லாம் அவரவர்கள் அனுபவித்து உணர்ந்த பிறகு தான் வாழைப்பழத்தைப் போல இருக்கும் என்று சொன்னால் அதை ஒத்துக் கொள்ள இயலும். 

ஆனால், அந்த இறைநிலையானது ஒன்றே ஒன்று தானே இருக்கிறது? அந்த ஒன்றே ஒன்றுக்கு எதனை உவமை காட்டுவது? உவமை காட்ட முடியாது. ஆகையினால் இவனே அதுவாகி அந்த நிலை அடைந்த அனுபவத்தில் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam

Wednesday, April 8, 2020

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கானம காரணம் என்ன?' -

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கானம காரணம் என்ன?' -

*இந்த வரலாறு முக்கியம்* :

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி' அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.

வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திராகாந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,

புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான், அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.

இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர். எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள். இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில் வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான் உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy's Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy's Lab தயாரித்ததாக இருக்கும்.

பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது. இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%. 2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.
-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி
~விகடன்~

Monday, April 6, 2020

Apple director. Message

உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி:

வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது.
நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.
எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.
நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும், 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி !

#வாழ்க்கையை_நேசியுங்கள்--------!
குழு நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள் மனம் இருந்தால் இதை பகிருங்கள் ஒரு செல்வந்தர் மனம் மாறினாலும் பத்து குடும்பங்களுக்கு உதவியாயிருக்கும் நன்றி நண்பர்களே🙏🙏🙏

Saturday, April 4, 2020

Maharishi thought April 4

*வாழ்க்கை மலர்கள்: ஏப்ரல் 4*

*ஓர் உலக ஆட்சி*

அரசியல் தலைவர்களாலோ, மதத் தலைவர்களாலோ பொருள்துறைத் தலைவர்களாலோ உலகில் அமைதி ஏற்படுத்திட முடியாது. ஏனெனில் இவர்கள் தனித்தன்மையில் எவ்வளவுதான் உயர்நோக்கம் உடையவர்களாக இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட வகையில் வாழ்க்கை நலத்தில் எல்லை கட்டிக் குழுவினர்கள் அளித்துள்ள பதவி, பணம், இவற்றிக்குக் கட்டுப்பட்டவர்கள்.

ஆகவே, ஆன்மீகத் துறையில் உலக மக்கள் அனைவரையும் பொறுப்புடன் இணைத்து நலம் காக்க ஆன்மீக நோக்குடைய ஒரு இயக்கம் தான் நேர்-நிறை உணர்வோடு உலக அமைதிக்கு வழிகாட்ட முடியும்.

நான் கொடுக்கும் திட்டமோ, மிகவும் எளிது; புரிந்து கொள்ளவும் செயல்படுத்தவும் இயல்பானது. ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரமளித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை ஐ.நா. சபை ஏற்படுத்தும் நீதி மன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டமும், செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும்.

தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது. இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர் வீர்ர்களின் சேவையையும், பின் தங்கிய நாடு, பின் தங்கிய மக்கள் இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் ஐ.நா. சபை மூலம் ஈடுபடுத்தி விடலாம்.

ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல சேவைக்குத் திருப்பி விடப்பட்டால் 15 ஆண்டுக் காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும் அமைதியாக வாழமுடியும்.

உலகெங்கும் ஊர் வாரியாக, நகர் வாரியாக, நாடுகள் வாரியாக இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும், எந்தப் பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி ஏற்படத் தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம்.

இந்தப் பெருநோக்கச் சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும் உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள்; கூடுங்கள்; நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
  K.Pudur MVKM Trust, Madurai - www.facebook.com/vethathiri.gnanam