மசாலா பொடி வகைகள்!
ரசப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் தலா - 50 கிராம், தனியா - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து, ஒன்று சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
•••
கறிவேப்பிலை பொடி
தேவையானவை: கறிவேப்பிலை - 4 கைப்பிடி, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.
நாரத்தை இலை பொடி
( வேப்பிலைக்கட்டி)
தேவையானவை: நாரத்தை இலை - 2 கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுத்துவிட்டு வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் விடாமல் இலைகளை லேசாக வறுக்கவும். பிறகு காய்ந்த மிளகாயை வறுக்கவும். அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: இது, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
••••
புளியோதரைப் பொடி
தேவையானவை: புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வேர்க்கடலை - ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு - 25 கிராம், வெந்தயம் - 2 தேக்கரண்டி, தனியா - 4 தேக்கரண்டி, மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு:வாணலியில் தேவையான போது இந்தப் புளியோதரைப் பொடியைச் சூடான சாதத்தில் தேவையான அளவு சேர்த்து, நல்லெண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலந்தால் உடனடி புளிசாதம் ரெடி.
•••
சாம்பார்பொடி
தேவையானவை: காய்ந்த
மிளகாய் - 50 கிராம், தனியா - 100 கிராம், துவரம்பருப்பு 50 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
வெந்தயம், மிளகு தலா - 10 கிராம்,
மஞ்சள் - 1.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை மீதமான தீயில் தனித்தனியாக வறுத்து அரைக்கவும்.
••
வேப்பம் பூ பொடி
தேவையானவை: வேப்பம் பூ - ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேப்பம் பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
No comments:
Post a Comment