Sunday, January 8, 2017

ஆண்களுகுக் சுகப்பிரசவம் என்றால் என்னவென்று தெரியாது

"வாழ்க நட்புடன்"

ஆண்களுகுக் சுகப்பிரசவம் என்றால் என்னவென்று தெரியாது என்பதால் இந்த பதிவு
சரி பிரசவ வலி எப்படி வரும்? முதலில் வலப்பக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல், இடைவெளி விட்டு மீண்டும், இடைவெளி விட்டு மீண்டும், இப்படியே தொடர்ந்து நடு வயிறு வலி ஆரம்பிக்கும் போது குழந்தை, தான் பிறக்க போகும் நேரத்தை முடிவு செய்தவிட்டது என்று அர்த்தம், உண்மை தான் குழந்தைதான் பிறக்கும் நேரத்தை முடிவு செய்கிறது மருத்துவர்கள் அல்ல.
புதிய உலகை காண வேண்டும் என்று குழந்தைகள் முடிவு செய்த பின், அதற்கு முதலில் இதுவரை வாழ்ந்த வரும் கருவறை உலகில் தனக்கான வாழ்வாதராத்தை அழிக்கும். அது பனிக்குடத்தை உடைத்தல். அங்குதான் குழந்தை சுவாசிக்கும், நீந்திகொண்டிருக்கும்.. அதை உடைத்த பின் புதிய வாழ்வாதாரத்திற்கான வழி நோக்கி முன்னெடுக்கும் போது பிரசவ வலி உச்சத்தில் இருக்கும், (முழு பனிக்குட நீரும் வெளியேறும் முன் மருத்துவமனை சென்றுவிட வேண்டும்) மொத்த வயிறும் வலிக்கும், சீராக சுவாசிக்க முடியாது. அதிக பதட்டம், இந்த நேரத்தில் பெண் வேண்டுவதெல்லாம் கணவனின் கரத்தை இறுக பற்றுதல் தான். அந்த நேரத்தில் வேறு யாரையும் தேடாது 'புருஷன் புருஷன் புருஷன் மட்டும்தான்.. ஆனா நம்மூர் மருத்துவமனைகளில் புருஷனை வெளியே நிப்பாட்டி விடுகிறார்கள்.
முதலில் இனிமா கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வார்கள். ஏற்கனவே வயிறு வலி இந்த லட்சணத்துல இது வேற.. அப்போ நைசா டாக்டர கூப்பிட்டு சொல்வாங்க,.''டாக்டர் என்னாலலாம் குழந்தை பெத்துக்க முடியுமான்னு தெர்ல ஆப்பரேட் செஞ்சுடுங்க'' //சுகப்பிரசவத்தை ஆப்பரேசன் செய்ய விரும்பாத காசுக்கு அலையாத அதிக நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க. // என்ன கத்துனாலும் கதறுனாலும் ''மவளே உனக்கு சுகப்பிரசவம்தான் என்பதில் உறுதியாக நிற்பாங்க'' அப்படி ஒரு டாக்டர் தான் திருநெல்வேலி பிரேமசுதா..
இப்ப பிரசவம்
கால் இரண்டையும் விரித்து வைத்துக்கொள்ளச் சொல்வார்கள். அப்போது வலி முதுகுத்தண்டை தாக்க ஆரம்பித்திருக்கும், எப்படி என்றால் கத்தியை எடுத்து முதுகுதண்டின் டிஸ்க்களுக்கு இடையில் சொருகினால் எப்படி இருக்கும் அப்படியான வலி.
ஒரு நர்ஸ் நெஞ்சு மேல ஏறி வயித்த பார்க்க உக்காந்து தன்னோட இரண்டு கால் முட்டுகளால் மேல்வயிற்றின் இரண்டு பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கும், கைகளால் மேல் வயிற்றை கீழாக தள்ளும். இந்த டாக்டர் வேற முக்கு முக்கு ன்னு உசுர எடுக்கும்.. ஏம்மா முடிஞ்சா முக்க மாட்டனா?
சிசேரியனில் மட்டும்தான் மயக்க மருந்து கொடுத்து பிரசவம் நடக்கும். அது சிசேரியன்,/ கத்திய வச்சி அறுப்பாங்க அப்பறம் தையல் எல்லாம் போட வேண்டுமே அதனால் என்கின்றிர்களா? நிற்க. சுகப்பிரசவதிலும் தையல் போட வேண்டும்.. அது வயிற்றில் கிடையாது /
பிறப்புறுப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் விரிவடையாத சூழல் இருக்கும்,. / கத்தரிப்பான் தோற்றத்தில் தேங்காய் உரிக்கும் உபகரணம் பார்த்து இருக்கிறிர்களா? தேங்காயில் அதன் கூர்மையான முனை கொண்டு ஒரு குத்து குத்தி இரண்டாக பிளக்க வேண்டும்... அதே மாதிரி ஒரு உபகரணம் கொண்டு பிறப்புறுப்பில் செலுத்தி அதன் கைப்பிடியை விரித்து ஒரு திருக்கு.. த்தா அங்கயே கண்ணு டொய்ங்ன்னு சொருகிடும்... ரைட்டு.... இந்த டாக்டர் நம்மள இன்னிக்கு கொல்லாம விடாது. செத்தே போயிடுவோம்ன்னு தான் தோணும்.
குழந்தையோட தலை வெளில தெரிது.. push push push...
...டாக்டர் முடியல டாக்டர்
ஏம்மா உனக்கு வலிக்கற மாதிரி தான் உன்னோட குழந்தைக்கும் வலிக்கும் அதோட வலியை குறைக்கணும்ன்னா நீ சீக்கிரம் முக்கி பிள்ளைய பெத்துக்கனும் அப்பறம் உன் இஷ்டம்.
அப்போ வரும் ஒரு வெறி.. நரம்புகள் முறுக்கி உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி ஓரிடத்தில் குவித்து முப்பது நொடி அளவில் நீண்ட முக்குதல்.. பிறப்புறுப்பை கிழித்துக்கொண்டு குழந்தை வந்து விழும்.
என்ன குழந்தை என்று சொல்லிய பின் குழந்தையை குளிப்பாட்ட கொண்டு போயிடுவாங்க.. ஹப்பாடா என்று நிம்மதியில் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் போது.. கிழிந்த பிறப்புறுப்பை டாக்டர் தைக்க ஆரம்பித்து இருப்பாள்
எது வரை உறுப்பு கிழிந்து இருக்கும் தெரியுமா? மலத்துவாரத்தின் மேற்பகுதி வரை.. இந்த டாக்டர் அப்பயும் மயக்க ஊசி போடாது.. உசுரோட வச்சுக்கிட்டே தையல் போடும். அதெல்லாம் கொடுமையிலும் கொடுமை.
அப்பறம் பெட் எல்லாம் மாத்தி புதுசா வார்ட் ரூம்ல கூட்டிட்டு போயி விட்ருவாங்க actually தூக்கிட்டு போயி..
குழந்தைக்கு பால் கொடுக்கணும்.. அந்த பயபுள்ளைக்கு கண்ணும் முழிச்சு இருக்காது.. பாலும் எப்படி உறிஞ்சு குடிக்கணும்ன்னு தெரியாது. ஆனா பசில அழும் பார்க்கவே பாவமா இருக்கும்.. பாலை கொஞ்சம் பீச்சு அதோட வாய்ல விட்டுட்டு .. காதை தடவி கொடுத்தா உறிஞ்சி குடிக்க ஆரம்பிச்சிடும். இன்னிய வரைக்கும் தீராத ஆச்சர்யமாக இருக்கிறது அது../ எப்படி காதை தடவினா உறிஞ்சு குடிக்க தோணுது?
எது எப்படியோ என்னிலிருந்து பிறந்த என்னுயிர், இன்னொரு நான், எனக்கான பசியை என்னிடமே தீர்த்துக்கொள்வது போல இருக்கும் குழந்தையின் பால் குடித்தல். அதுவரை உடல் அனுபவித்த கஷ்டங்களுக்கு மனது இலகுவாக இருக்கும். அதன் பெயர் மகோன்னதம்.
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் மீண்ட ஜனனம் நீ
நீடூழி வாழ்க.

"வாழ்க நட்புடன்"

இனிய இரவு வணக்கம்.

🙏🏼

No comments:

Post a Comment