Monday, January 16, 2017

மனிதனின் நிலை

-
ஒரு விதை விதையுங்கள். ஒரு செடி முளைவிடும்.
ஒரு மரம் தோன்றும். அதன் கிளைகள் உயர்ந்து, பரந்து, விரிந்து வளர்ந்து பழங்கள் கொடுக்கும்.
அந்தப் பழத்தை நாம் ருசிக்கும் போதுதான் நாம் விதைத்த விதை கசப்பானதா, இல்லை இனிப்பானதா என்பதை அறிந்த கொள்ள முடியும்.
சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் விதைக்கப்பட்டு, இது நாள் வரை போஷிக்கப்பட்டு வந்த பண்பாடு மற்றும் மதம் இவற்றின் விதைகளின் பழங்கள் தான் இன்றைய மனிதன்.
இப்போது அந்த பழம் கசக்கிறது; அது முழுவதும் துக்கமும் முரண்பாடுகளும் கொண்டு உள்ளது.
ஆனால் அந்த விதைகளின் புகழ் பாடிக் கொண்டும், அதன் நிழலில் ஒதுங்கிக் கொண்டும், அவற்றில் இருந்து அன்பு மலர்களை எதிர்ப் பார்த்துக் கொண்டு இருக்கும் மக்கள் வேறு யாரும் இல்லை நாம் தான்.
எப்படி கல்லுக்குள் சிலை மறைந்து இருக்கிறதோ.....
அது போல மனிதனுக்குள்ளும் அன்பு மறைந்து இருக்கிறது.
தேவை இல்லாத பகுதியை அகற்றும் போது அழகிய கற்சிலை உருவாவது போல
நமக்குள் இருக்கும் தீய குணங்களாகிய பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய குணங்களை களை எடுத்தால் மனித மனதிற்குள்ளும் அன்பு ஊற்று பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கும்.
அன்பு மனத்துக்குள் ஆடை பட்டு கிடக்கிறது.
விடுதலை செய்யப்படுவதைத் தான் அது கேட்கிறது.
எனவே அன்பை எப்படி உருவாக்குவது என்பதல்ல கேள்வி.
அதை எப்படி உணர்வது என்றும் உணர்ந்தபின் எப்படி வெளியாகும் என்பது தான் கேள்வி.
நாம் நம்மை எதனால் சிறையிட்டு வைத்துள்ளோம்.....???
அன்பு நம்மிடம் இருந்து வெளிவர அனுமதிக்காதது அது எது....???
தான் என்ற அதிகாரப் பற்றும், தனது என்ற பொருள் பற்றும் தான் சேர்ந்து தன்முனைப்பு உருவாகி திரை போட்டு அன்பை மறைத்து உள்ளது.
தன்முனைப்பு என்ற சிறையில் இருந்து விடுதலை
பெறுவோம்.
அன்பை பகிர்வோம்.
அன்பால் நிறைந்து இருப்போம்.
அன்பு என்னும் மலர்களை நுகர்ந்தும் அதை அனைவருக்கும் பகிர்ந்தும் அன்பு பாராட்டி நன்றியுடன் கொண்டாடுவோம்

No comments:

Post a Comment