Saturday, November 19, 2016

Maharishi தன்முனைப்பு

வேதாத்திரிய சிந்தனைகள் : " தன்முனைப்பு "
இறையுணர்வு மறந்ததனால் எழுந்த தன்முனைப்பு
'யான்', 'எனது' எனும் இரண்டு உளப்போக்காய் விரிந்து
குறையறிவால் தன் இனத்தின் பொருள் சுரண்டும் போக்கும்
கொடுஞ்செயலாம் அடக்கியாளும் பேராசையும் ஆம்
நிறையறிவால் ஆராய்வீர், உலகமக்கள் வாழ்வில்
நேர்ந்துள்ள துன்பங்கள் அனைத்தும் இவ்விரண்டும்
மறை முகமாய் மனித மனதுள்ளடங்கி ஆற்றும்
மாறான பழிச்செயல்கள் அனைத்தும் என்று தேர்வீர்.
-வேதாத்திரி மகரிஷி
எங்கும் எவ்வுயிரிலும் நிறைந்திருக்கும் இறைநிலை
தனக்குள்ளும் இருக்கின்றது என்பதை அறியாத அல்லது
அறிந்தும் மறந்துவிட்ட காரணத்தினால் தன்னை உயர்வாக
நினைத்து, தன்முனைப்பு கொண்ட மனிதன் "தான்" எனும்
அகங்காரப் பற்றினாலும், "தனது" எனும் பொருள்
பற்றினாலும், தன் இனத்தையே அடக்கியாள
முயற்சிப்பதும், பிறருடையப் பொருள்களைப் பறித்து
தனது உடைமை ஆக்கிக்கொள்ள முயற்சிப்பதும்,
தனது பிறவியின் உன்னதநிலையை அறியாமல்
குறையறிவால், மனிதன் செய்யும்செயல்களே.
நிறையறிவில் ஆழ்ந்து ஆராய்ந்துபார்த்தால் மனித
குலம் அடையும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம்
இவ்விரண்டு எண்ணத்தின் போக்கே ஆகும். இதன்
விளைவே ஆறு தீய குணங்களும், ஐந்து பெரும்
பழிச் செயல்களும் ஆகும். '' தன்முனைப்பு ''
ஒழிப்போம், நலம்பல காண்போம். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment