Wednesday, November 16, 2016

Maharishi message ( 16 Nov)

வாழ்க வையகம் !வாழ்க வளமுடன்!!

இன்றைய சிந்தனை :

நவம்பர் 16 :

இறைவனின் கருவி :

இறைவனுடைய எந்திரமாகவே இருக்கக்கூடிய மனிதனிடம் - இறைவனுடைய கருவியாகவே இருக்கக்கூடிய மனிதனிடம் - முழுமையாக ஆறாவது அறிவு வந்து விட்டதால், இறைவனோடேயே கலக்கக் கூடிய அளவுக்கு மனிதனிடம் ஆற்றல் இருப்பது தெரியவரும். அந்த ஆற்றலைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டால் போதும். நீங்கள் இனிமேல் இறைவனிடம் போய் எதுவும் தனியாகக் கேட்க வேண்டியது இல்லை. உங்களுடைய மனத்தின் அடித்தளத்தில் இறைவனே அமர்ந்திருக்கின்றான். அதைத் தெரிந்து கொள்ளாதது தான் உங்களுடைய தவறு. அந்தத் தவறு தான் அவனை மறைத்துக் கொண்டு இருக்கிறது. சும்மா ஒரு தட்டு தட்டிவிட்டால் போதும்; உங்கள் அறிவு பிரகாசிக்க ஆரம்பித்து விடும்.

அப்படித் தட்டிவிடும் வேலை தான், 'நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் என்ன இருக்கிறது? அதை எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எப்படிப் பெருக்கிக் கொள்ள முடியும்?' என்ற ஊக்கம். ஒரு குடும்பமானாலும் சரி, தனி மனிதன் ஆனாலும் சரி, அல்லது சமுதாயம் ஆனாலும் சரி, எல்லோருமே ஆக்கத்துறையில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க முடியும். இந்த தத்துவம் விஞ்ஞானத்திற்கு ஒத்தது. இந்த எனது விளக்கம் உளவியல் தத்துவத்திற்கும் சரி, அல்லது வாழ்க்கைக்கும் சரி, எதற்கும் முரண்படாது. உலகத்திலே இது வரைக்கும் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய எந்த மதத்திற்கும் அது முரண்பாடானது ஆகாது.

.வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment