Wednesday, November 23, 2016

பிருத்திவி முத்திரை

பிருத்திவி முத்திரை (மண் முத்திரை)
--------------------------------------------------------
மோதிர விரல் நுனியுடன் கட்டை விரல் நுனியைச் சேர்த்து மென்மையாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டி இருக்க வேண்டும். இவ்வாறு செய்யப்படும் முத்திரைக்கு  பிருத்திவி முத்திரை என்று பெயர்.தானியங்கள், காய்கறிகள்,பழங்கள் முதலான  உணவுப்பொருட்கள் அனைத்தும் மண்ணில்தான் விளைகின்றன. உடலுக்குத் தேவையான தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள் அனைத்தும்  நாம் உண்ணும் உணவுப்பொருட்களிலிருந்தே கிடைக்கின்றன. மனித உடலின் பெரும் பகுதிகள்  நிலத்தன்மை கொண்டவை. திடமும் வளர்ச்சியும் நிலத்தின் பண்புகள். அதுபோல நம்மைத் திடப்படுத்தவும், வளர்ச்சி அடைய வைக்கவும் பிருத்திவி  முத்திரை உதவுகிறது. நில தத்துவத்தைக்குறிக்கும் மூலாதாரச் சக்கரத்தை வலுப்படுத்துவதால், இந்த முத்திரைக்கு ‘மூலாதார முத்திரை’ என்று பெயர். இந்த முத்திரை நம் உடலில் நிலத்தின் பண்புகளைச் சமன்படுத்த உதவுகிறது. நல்ல ஆரோக்கியமாக வளரும் பிள்ளைகள் இந்த முத்திரையை செய்யக்கூடாது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளும், 10-20 வயது வரையுள்ள ஆண்களும், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் மட்டும் இந்த முத்திரையை செய்யலாம்.

பலன்கள்
*வயோதிகத்தில் ஏற்பட்ட உடல் சோர்வு, உடல் மெலிதல், பசியின்மை, நாட்பட்ட நோய்களால் ஏற்படும் வலிகள் படிப்படியாகக் குறையும்.

*எடை குறைவாக இருக்கும் குழந்தைகள், வளர்ச்சிக் குறைபாடு, கை கால் சூம்பி இருத்தல் போன்ற பிரச்னை உள்ளோர், இரு வேளை 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

*சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்த முத்திரையை அவசியம் செய்ய வேண்டும். இதனுடன், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.

*குறிப்பிட்ட காலத்துக்கு மேல் சத்து மாத்திரைகளைச் சாப்பிட முடியாமல் நிறுத்தியவர்கள், மேற்கொண்டு இந்த முத்திரையைச் செய்துவர நல்ல பலன் தெரியும்.

*டைஃபாய்டு காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் உடல்சோர்வு, உடல்வலி, எடைக் குறைவு பிரச்னைகள் உள்ளோர், இந்த முத்திரையை ஒரு மாதம் தொடர்ந்து செய்துவர, பிரச்னைகள் சரியாகும்.

*மூலாதாரச் சக்தியைத் தூண்டுவதால், பருவமடையத் தாமதமாகும் பெண்கள், இந்த முத்திரையைத் தினமும் இரண்டு வேளையும் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

*அரிப்பு, தடிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள், இதைச் செய்துவர படிப்படியாகப் பிரச்னைகள் குறையும்.

*போலியோ, பக்கவாதம் இருப்போர் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, அன்றாட வேலைகளை இயல்பாகச் செய்யும் அளவுக்கு உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

*ஆண்கள் வீரிய விருத்திக்குத் தினமும் செய்யலாம்.

*40 வயதுக்கு மேல், இரு வேளையும் முறையே 20 நிமிடங்கள் செய்துவரலாம்.

*வறண்ட சருமம், நகம் அடிக்கடி உடைதல், பற்கூச்சம், முடி உதிர்தல், நுனி முடிப் பிளவுபடுதல், செம்பட்டை முடி, இளநரை இருப்பவர்கள், இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

*உடைந்த எலும்புகளை ஒட்டவைக்க சிகிச்சை எடுப்பவர்கள், ஓய்வு நேரத்தில் இந்த முத்திரையை ஐந்தாறு முறையாகப் பிரித்து, 20 நிமிடங்கள் வரை செய்ய, எலும்புகள் விரைவாகக் கூடுவதற்கு உதவியாக இருக்கும்.

*பெண்களின் ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்ய, இந்த முத்திரையைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.
பே.பா.சேகர

No comments:

Post a Comment