Monday, December 26, 2016

சித்தர்களின் சிந்தனை :


----------------------------------

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே ;
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ ;
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும் ;
காட்டானை மேலேறிஎன் கண்ணம்மா கண்குளிரப் பாரேனோ.
- அழுகுணிச் சித்தர்

மேலோட்டமாக பார்க்கும்போது இக்கவியின் பொருள் -
" ஊருக்குக் கடைப் பகுதியில் அமைந்துள்ள கடைத் தெருவைக்
காண்பதற்கு யானை மீதேறி செல்லும்போது ஊரில்
உள்ள மக்கள் கிண்டல் செய்து பார்ப்பார்கள். இருப்பினும் நான்
யானை மீதேறி கடைத் தெருவைக்கு சென்று கண்குளிரப் பார்ப்பேன் ",
எனும் வகையில் கவிதை அமைந்துள்ளது. சற்று ஆழ்ந்து நோக்கும்
போது...." அனைத்தையும் அறியும் அறிவு தன்னை வெளிக்காட்டுவது
இல்லை. அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நால்வகை
பேறுகளில் கடைசியாக இருப்பது வீடுபேறு. எந்த வீட்டில் இருந்து
நாம் வந்தோமோ அந்த வீட்டை அடைவது வீடுபேறு. அல்லது எல்லா
தோற்றங்களுக்கும் அடிப்படையாக உள்ள பஞ்சபூதங்களுக்கும்
கடைசியாக இருப்பது பரம்பொருள். ஆக, நம் அறிவைப் பற்றி, நாம்
பரம்பொருளை அறிய முயற்சிக்கும்போது, நமது ஐம்புலன்கள்
எங்களைமீறி நீங்கள் பரம்பொருளை அடையமுடியுமா என்று
நம்மை கேலி செய்கின்றன. நாட்டார் என்பது நமது ஐம்புலன்கள்.
'சாந்தோக்கிய உபநிஷத்' என்ற நூலில் நமது உடலை பிரம்மபுரம்
என்று குறிப்பிட்டுள்ளார்கள். பிரம்மபுரம் என்றால் இறைவன் வசிக்கும்
நகரம். இந்த நகரத்தில் உள்ள புலன்கள் நாட்டார். இருப்பினும்
அறிவைக்கொண்டு உங்களை வென்று நான் பரம்பொருளைக்
காண்பேன் என்று ஆசிரியர் தெரிவிக்கிறார்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment