Saturday, January 9, 2016

காயகல்பம்

#காயகல்பம்

முதற்பதிப்பு முன்னுரை
.
.

மனிதனிடம் சிந்தனை வளர்ச்சி பெற்ற காலம் முதல் நோய், முதுமை, மரணம் இவற்றை தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முடியுமா என்று சிந்தித்தவர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிபுணர்கள் எண்ணில் அடங்காதவர். இந்த முறையிலே ஒரு சிறு அளவில் ஒவ்வொரு துறையினரும் வெற்றிபெற்று உள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம் ; முழுமையாக ஐயமின்றி விளக்கம் பெற்று வெற்றி கண்டவர்கள் ஒரு சிலரே. அவர்களும் மற்றவர்களுக்கு விளக்கும் வகையில் தெளிவான முறையைப் பின்பற்ற முடியவில்லை. இவ்வளவுக்கும் காரணமென்ன??

.
.
உடலை மட்டும், உயிர் இயக்கங்களை மட்டும் அறிவில் கொண்டு மேலே சொல்லப்பட்ட ஆராய்ச்சி செய்தார்களே தவிர, உயிர், உயிரின் மூலம், உயிர் தாங்கி, உயிர் விளைவு இந்த இரகசியங்களை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளவோ, இவற்றை மற்றவர்களுக்கு விஞ்ஞான, மெய்ஞான நுட்பங்களோடு எடுத்துக்கூறி விளங்க வைக்கவோ முடியவில்லை.

.
.
பன்னிரண்டு நீரோடு கண்கள் உள்ள வாராவதி(பாலம்) ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். பக்கத்திற்கு ஐந்து நீரோடு (நீர்+ஓடுதல்=நீரோடு) கண்கள் நன்றாக கட்டப்பட்டுள்ளன; மத்தியில் இரண்டு நீரோடு கண்கள் கட்டப்படாது விடுபட்டுள்ளன என்றால், பயன் என்னவாகும்?
இது போன்றே உயிரையும், உயிரைப் பற்றிய மறைபொருளான நுட்பங்களையும் அறிந்து விளக்கக்கூடிய கல்வி முற்காலத்தில் போதிய அளவில் அமையவில்லை.இன்றைய மக்களுக்கு விஞ்ஞான நுட்பம் எளிய முறையில் விளங்கிவரும் காலமாக, நாம் வாழும் காலம் விளங்குகிறது.
.
.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் உணர்ந்த , என் அனுபவத்தின் பயனாய்க் கண்ட விளைவுகளை உலகெங்கும் உள்ள மக்கள் வாழ்வில் நற்பயன் விளைவிக்க வேண்டி, “காயகல்பக்கலை” என்ற பெருநிதியை வேண்டுவோர்க்கு வெளிப்படையாக அறிவித்தும், பயிற்சியளித்தும் வருகிறேன்.
.
.
மாணவர்கள் , ஆசிரியர்கள், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், இளமை நோன்பு (celibacy) காக்கும் ஆண், பெண் அனைவருக்கும், இல்லத்தார்க்கும், பெருநன்மை பயக்கத்தக்கது இந்த காயகல்ப கலையாகும். மனிதகுல வாழ்க்கையில் நிலவிவரும் பெரும்பாலான சிக்கல்களைத் தீர்க்கவல்லதாகவும் இப்பயிற்சி விளங்குகிறது.
.
.
இது உலகெங்கும் பரவி நற்பயன் விளைவிக்க வேண்டுமென்று வாழ்த்து கூறி மகிழ்கிறேன்.
இப்பயிற்சி பெறுவோர் அருளும், பொருளும் ஒருங்கே பெற்று, உடல்நலம், மனவளம், அறிவுநலம் ஓங்கி சிறப்பாக வாழ்வார்களாக
.
.
வாழ்க வளமுடன்
பொள்ளாச்சி (24-09-1984)
.
-உலக நலத்தொண்டன்
வேதாத்திரி

.
#தொடரும்

No comments:

Post a Comment