Thursday, January 23, 2020

Maharishi thought Jan 18th

*வேதாத்திரிய இரகசியங்கள்: ஜனவரி 18*

*முதல் குரு*

சென்னை மயிலாப்பூர் நடுத்தெருவிலும், பிறகு ரொட்டிக்காரத் தெரு நாச்சிமுத்து அருணாசலம் தெருவிலும் குடியிருந்த வைத்திய பூபதி
எஸ். கிருஷ்ணா ராவ் ஆயுர்வேத, சித்தா, யுனானி மருத்துவம் மூன்றிலும் சிறந்த நிபுணர். அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மகான். அவர் மந்தைவெளி பிராடிஸ்ரோட்டில் மருந்தகம் ஒன்று வைத்திருந்தார். மாலை வேளைகளில் மட்டும் மருந்தகத்திலிருப்பார்.

ஒருநாள் அவ்வழியே சென்ற வேதாத்திரியார் வைத்திய பூபதி, தத்துவ ஞானத்தைப் பற்றி மற்றொருவருடன் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, கடை ஓரத்தில் நின்று அவர்கள் பேசுவதைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். வைத்தியபூபதி இவரைப் பார்த்து “யாரப்பா நீ? ஏன் இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டார். தான் கூடுவாஞ்சேரியிலிருந்து வந்து அக்காள் கணவர் சண்முகமுதலியார் வீட்டில் தங்கி ரேஸ் கிளப்பில் வேலை செய்வதைக் கூறி, தாங்கள் பேசும் விஷயங்களைக் கேட்கக் கேட்க விருப்பமாகிறது என்றார். நீ விரும்பினால் ஓய்வான நேரங்களில் வந்து செல்லலாம் என்று கூறினார்.

பிறகு வாரத்தில் நான்கு நாள் அவரை சந்தித்தார். அறுபத்து ஐந்து வயதான வைத்தியபூபதி, எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் சொந்த மகனாகவே பாவித்து ஆயுர்வேத மருத்துவத்தை முழுமையாகவும் இடையிடையே சித்த மருத்துவமும் சொல்லிக் கொடுத்தார். புருவத்திடையே தியானம் செய்யும் யோக முறையும் போதித்தார்.

சரசம்ஹிதை, சுச்ருத சம்ஹிதை, மாதவநிதானம், அஷ்டாங்கஹிருதயம், ரசரத்ன சமுச்சயம் முதலிய சம்ஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்து தத்துவ விளக்கம் நன்கு போதித்தார். இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்தில் தேர்ந்த அறிவையும், தத்துவ அறிவில் தெளிவையும் பெற்றார். தியானத்திலும் நல்ல பற்று உண்டாகுமளவிற்கு ஓர் சிறந்த மனிதனாக உயர்த்தினார். வேதாத்திரியார் மகானாக உயர்ந்த பிறகும், பிற்காலங்களில் தன்னை உயர்த்திய மகானை அடிக்கடி நினைவு கூர்ந்து போற்றி வணங்குவார்.

*_தந்தைதாய் ஈருயுரும் ஒன்று சேர்ந்து_*
*_தழைதொரு உடலாகி உலகில் வந்தேன்_*
*_அந்த ஈருயிர் வினைகள் அறமோமற்றோ_*
*_அளித்த பதிவுகள் எல்லாம்என் சொத்தாச்சு_*
*_இந்தஅரும் பிறவியில்முன் வினை அறுத்து_*
*_எல்லையில்லா மெய்ப் பொருளை அடைவதற்கு_*
*_வந்தஒரு உதவி குருஉயிரின் சேர்க்கை_*
*_வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம்._*

ஞானக்களஞ்சியம் கவி: 11. குருவின் உதவி

நாளைய இரகசியம்: *வைத்திய பிஷக்*
------------------------------------------------------------------
K.Pudur MVKM Trust, Madurai - www.fb.com/vethathiri.gnanam
சென்னை மாநகர் அறிவுத்திருக்கோயில் - CALM TRUST

No comments:

Post a Comment