Thursday, January 23, 2020

குரங்கிலிருந்து மனிதன் இப்போது ஏன் வருவதில்லை?":*

*"குரங்கிலிருந்து மனிதன் இப்போது ஏன் வருவதில்லை?":*

சார்லஸ் டார்வின் கண்டுபிடிப்பை நாமெல்லாம் பள்ளியில் படித்திருப்போம் 'மனிதன் குரங்கில் இருந்துதான் வந்தான்' என்று. அப்படியானால் இப்போது ஏன் மனிதன் அதுபோல் தோன்றுவதில்லை? மனிதனின் பிறப்பிற்கு காரணமான மனித குரங்குகள் (Apes) இன்றும் வாழ்கின்றனவே! அவைகள் ஏன் மனிதனை பெற்றெடுப்பதில்லை?

*இக்கேள்விகளுக்கு வேதாத்திரி மகரிஷி வழியில் விடை காண்போமா?*

மனிதன் குரங்கிலிருந்து மட்டும் வரவில்லை! 'யாளி' எனப்படும் சிங்க வகையும் சேர்ந்து உருவானவன்தான் மனிதன். ஆம். சிங்கத்தில் ஒரு பெரிய வகைதான் இந்த யாளி. இதில் இருவகை உண்டு
1. சிம்ம யாளி - சிங்க முகம் உடையது.
2. யானை யாளி - துதிக்கை உடையது.
இந்த இரண்டையும் நாம் கோவில் சிலைகளில் நிச்சயம் பார்த்திருப்போம்.

இதில் சிங்க முக யாளிக்கும்  ஒரு வாலில்லா பெண் மனித குரங்கிற்கும் சந்தர்ப்ப வசமாக ஒரு இனச்சேர்க்கை (Accidental Mating) ஏற்பட்டுள்ளது.  இதை *'சடுதி மாற்றம்'* என்பார்கள். அதாவது, இயற்கையில்
1. வேறுபட்ட உயிரினங்கள் உடலுறவு கொள்ளாது.
2. உடலுறவு கொண்டாலும் கரு தரிக்காது.
3. கரு பிறந்தாலும் அது மலட்டுத்தன்மையாக இருக்கும்.
இதுதான் இயற்கை விதி. ஆனால் இயற்கையே தனது 3 விதிகளையும் தானே மீறித்தான் புதிய புதிய உயிரினங்களை தோற்றுவித்துள்ளது.

அந்த வகையில், யாளியும் வாலில்லா பெண் குரங்கும் தற்செயலாக உடலுறவு கொண்டுள்ளது. இதில் கருவும் தரித்து  ஒரு Male Cross Product  வந்துள்ளது. அந்த ஆண் மகவுதான் 'நரசிம்மர்'. அந்த நரசிம்மர் கருவுருவாக்கும் (Reproducing Ability) தன்மையுடன் பிறந்துள்ளார். அவர் மீண்டும் வாலில்லா பெண் குரங்குகளுடன் சேர்ந்து வாழ்ந்து, அவற்றிற்கு பிறந்த குழந்தைகளே மனிதர்கள்!
வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது உரைகளிலும் 'ஞானமும் வாழ்வும்' நூலிலும் இந்த மனித பரிணாம உண்மைகளை கூறியுள்ளார்.

இந்த யாளியானது சிங்கத்தை விட பெரியதும் கொடூரமானதுமாகும். தன் இனத்தையே கொன்று தின்னும் குணமுடையது. அதனால் இவ்வினம் முற்றிலும் அழிந்து விட்டது.

மனிதனின் பரிணாம ரகசியத்தை நமது வைணவ பெரியோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து தசாவதாரத்தில் 4  வது நரசிம்ம  அவதாரமாக வைத்துள்ளனர்.

மேலும், குற்றாலம் சித்திர சபை கோவிலில் இந்த யாளியை மிகவும் தத்ரூபமாக வரைந்து வைத்துள்ளனர். அங்கு சென்றால் தேடிப் பாருங்கள்.

நர+சிம்மர். நர என்றால் மனிதன். நரசிம்மரின் தாய் - வாலில்லா குரங்கு. தந்தை - யாளி. அவருக்கு தாய் போன்ற நிமிர்ந்த உடல், தந்தை போல் சிங்க முகம். இவர்தான் உண்மையில் நம் எல்லோருக்கும் தந்தை. இவர் உருவாக்கிய குடும்பம் தான் பரவி பெருகி இன்று 800 கோடி மக்கள் தொகையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிங்கத்திற்கு முகம் சதுரமாக இருக்கும். மனிதனுக்கும் அப்படியே. சிங்கத்தின் தோல் மயிர் குறைவு. நமக்கும் அவ்வாறே. குரங்கு சைவமாயிற்றே! ஆனாலும் ஏன் மனிதன் அசைவம் சாப்பிடுகிறான் என்பது இப்போது புரிகிறதா? ஆம். அது சிங்கத்தின் குணமே! மேலும் சில காட்டுவாசிகளும் மந்திரவாதிகளும் அகோரிகளும் நர(மனித)மாமிசம் சாப்பிடுவதும் எல்லாம் யாளியின் மரபு (Genes) செய்யும் வேலையே!

ஆண்சிங்கத்திற்கு மட்டுமே மீசையும் தாடியும் (பிடரி மயிர்) இருக்கும். பெண் சிங்கத்திற்கு இருக்காது. அதே மரபினால் தான் ஆண்களுக்கு மட்டும் மீசை தாடி இருப்பது!

குரங்கு முகத்தையும் சிங்கத்தின் முகத்தையும் சேர்த்துப் பாருங்கள். நரசிம்மரின் முகம் கிடைக்கும். அதை மீண்டும் குரங்குடன் சேர்த்துப் பாருங்கள். அதுவே மனித முகம்!

மனிதனின் பிறப்பிற்கு காரணமான யாளி இப்போது இல்லை. அதனால் மனிதன் இனி குரங்கிலிருந்து வரவே முடியாது.

'சடுதி மாற்றம்' 3 விதிகளில் முதல் இரு விதிகளை இயற்கை தானே மீறுவதை இன்றும் நீங்கள் காணலாம்.

1. நாய் பன்றியுடன் உறவு கொள்ளுவதை இன்றும் நமது ஊர்களில் அரிதாக காணலாம். நாயானது ஆடு, பூனை,குரங்கு, கோழி ஆகியவைகளுடன் இணை சேருவதை Youtube ல் காணமுடிகிறது. ஆனால் அவை கருதரிக்காது.

2. குதிரையும் கழுதையும் அருகருகே இருந்தால் தானாகவே இணை சேர்ந்து விடும். கருவும் தரிக்கும். அதுதான் ' கோவேரி கழுதை' எனப்படுகிறது. ஆனால் இக்கழுதை மலட்டுத்தன்மையுடன் தான் இருக்கும்.  அது மீண்டும் ஒரு குதிரை அல்லது கழுதையுடன் உறவு கொண்டாலும் கருதரிக்காது. காஷ்மீர் போன்ற மலைப்பகுதிகளில் அதிக தூரம் ஓடவும் பாரம் இழுக்கவும் இவை இன்றும் உருவாக்கப்படுகின்றன.

மேலும் இது போல் நாயும் நரியும் இணை சேர்ந்தாலும் குட்டிகள் பிறக்கும். ஆனால் அவை மலடாகவே இருக்கும். செய்தித்தாள்களில் எப்போதாவது, மலையடிவார கிராமத்தில் பெண் நாயுடன், காட்டிலிருந்து வந்த ஆண் நரி இணை சேர்ந்து, நாய்க்கு நரிக்குட்டிகள் பிறந்து அவை ஊளையிடும் செய்திகளைக் காணலாம்.  அக்குட்டிகள் வளர்ந்தாலும் இனவிருத்தி செய்ய முடியாது.

இவ்வாறு தனது இரண்டு விதிகளையும் மீறும் இயற்கை,  மூன்றாவது விதியையும் மீறும் போது தான் புதிய உயிரினங்கள் உருவாகி, அவை தனி இனமாகின்றன.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது உரையில் " *இயற்கை என்ற நந்தவனத்தில் இறுதியாக பூத்த மலரே மனிதன்*!" என்று கூறியுள்ளார். அதனால் இதற்கு மேல் ஒரு புதிய உயிரினம் வர வாய்ப்பே இல்லை!

மேலும் இன்று உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், இறைநிலை படிப்படியாக  மனிதனாக பரிணமிக்க எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளே, வடிவங்களே ஆகும்.
தன் பெருமைகளையும் மதிப்பையும் தானே உணர்ந்து அறிவில் முழுமை பெறவே மனிதனாக வந்துள்ளது. இறைநிலையின் நோக்கம் ஆறறிவு மனிதனில் முழுமையடைவதால்
இதற்கு மேல் ஏழாம் அறிவு என்றோ புதிய உயிரினம் என்றோ ஒரு பரிணாமம் நிகழ்த்த இறைநிலைக்கு அவசியம் இல்லை.

குருவடி தொடர்வோம். வாழ்க வளமுடன்..

No comments:

Post a Comment