Thursday, October 13, 2016

மெளனம்


=======

ஒரு பெரிய அறிஞர். அவருக்கு அட்டாங்க யோகத்தில் பல சந்தேகங்களை
தீர்த்துக்கொள்வதில் ஆசை. ஒரு குருவைத் தேடி வந்தார்.
வணக்கம் போட்டார். விஷயத்தைச் சொன்னார்.
அவர் பேசுகிறவிதத்தை ஊன்றிக் கவனித்த குருநாதர் சொன்னார்.
’இதோ பாரப்பா, உன் மனசு ஒரு நிலையில் இல்லை.
நீ ரொம்பக் குழம்பியிருக்கிறாய்.
இப்போது நான் உனக்கு அட்டாங்க யோகம் சொல்லிக்கொடுத்தால் பிரயோஜனம் இருக்காது.
அநாவசியமாக நம் இருவரின் நேரமும் வீணாகும்.
'இதைக் கேட்ட அறிஞரின் முகம் சுருங்கிவிட்டது.
’குருவே, நீங்களே இப்படிச் சொன்னால் நான் எங்கே போவேன்...???’ என்று அழாக்குறையாகக் கெஞ்சினார்.
‘எப்படியாவது நீங்கதான் எனக்கு உதவி செய்யணும். என் மனசில இருக்கற சந்தேகங்களைத் தீர்த்துவைக்கணும்.’
‘சரி. உன்னை நான் சிஷ்யனா ஏத்துக்கறேன். ஆனா ஒரு நிபந்தனை.’
‘சொல்லுங்க குருவே....!!!’
‘இங்கே நீ ஆறு மாசம் மௌன விரதம் இருக்கணும்.’
’மௌன விரதமா....???’ வந்தவர் அதிர்ந்தார்.
’அப்புறம் எப்படி நான் என்னோட சந்தேகங்களைக் கேக்கறது....???’
’அதையெல்லாம் மனசுல குறிச்சுவெச்சுக்கோ. எல்லாத்துக்கும் நான் பதில் சொல்வேன். ஆனா இப்போ இல்லை. 6 மாசம் கழிச்சுதான்.’
அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
ஆசிரமத்தில் சேர்ந்தார். மௌன விரதத்தைத் தொடங்கினார்.
அடுத்த பல மாதங்கள் அவருடைய நேரம்முழுவதும் தியானம், பிரார்த்தனை, வாசிப்பு, குருவின் சொற்பொழிவுகளைக் கேட்பது என ஓடியது.
மெல்ல அவரது மனம் தெளிந்தது. முன்பு குழப்பியடித்த விஷயங்கள் இப்போது நிதானமாக யோசித்தபோது புரிந்தன.
ஆறு மாதங்கள் முடிந்தன. குரு அவரை அழைத்தார்.
’நீ மௌன விரதம் இருந்தது போதும். இப்போது உன் கேள்விகளைக் கேட்கலாம்.’
அறிஞர் அமைதியான குரலில் சொன்னார்.......
’கேட்பதற்கு ஒன்றும் இல்லை குருவே'.....!!!.

No comments:

Post a Comment