Tuesday, February 9, 2016

ஆட்டிசம் ஒரு பார்வை.

ஆட்டிசம் ஒரு பார்வை...
************************************
ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம்.இது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறிவிடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம்.              
ஆட்டிசம் குறைபாடு எதனால்  ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பத்தாயிரம்  ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது. பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரை ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு இங்கு இல்லை. இதனை முன்னரே கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். அத்தோடு இவ்வகை குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்திற்கும் இக்குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்புமில்லை.இதனை அடையாளம் காணமல் விடுவதால் இக்குழந்தைகளின் எதிர் காலத்தை வீணாக்கி விட்டுக்கொண்டு இருக்கிறோம். இங்கே மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலரும் ஆட்டிசத்தின் பிடியில் இருப்பவர்கள் என்கிறார்கள் இதற்காக பணியாற்றிக்கொண்டிப்பவர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
ஆட்டிசத்தின் தன்மைகள் :
• சமூக வாழ்வுக்கு தேவையான ஆற்றல்கள் இல்லாமை
           இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது; அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது, அவ்வளவுதான்! சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.
• தொடர்புகொள்ளும் ஆற்றல்கள் இல்லாமை
            ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஆற்றல்கள் இல்லாதவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் பேசும் திறன் அற்றவர்கள். அப்படியே ஒருக்கால் பேசும்திறன் இருந்து மொழி ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர்கள் கூட அவற்றை திறம்பட கையாளும் வழி தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் பேச்சு மற்றும் முகபாவங்கள் சைகைகள் மூலம் தங்கள் எண்ணங்களை உணர்த்துவதற்கோ, அல்லது மற்றவர்கள் உணர்த்துவதை புரிந்துகொள்ளவோ இயலாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
• விளையாட்டுகளுக்கான திறனோ ஆர்வமோ இல்லாமை
              சாதாரணமாக விளையாட்டின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும் கற்பனைத் திறனும் ஆட்டிசக் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை. தன்னை ஒரு மிருகமாகவோ, பறவையாகவோ பாவித்துக் கொண்டு அவற்றின் நடை,உடை பாவனைகளை விளையாட்டில் புகுத்தி மகிழும் கற்பனைத்திறன் இல்லாதவர்கள் இவர்கள். புலனியக்க ஒருங்கிணைப்பில் உள்ள பிரச்சினையால் (னுளைழசனநச ழக ளுநளெழசல ஐவெநபசயவழைn) சிறிதும் சலிப்படையாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விளையாட்டுகள், அங்க அசைவுகளில் இந்தக் குழந்தைகள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இக் குறைபாடுகள் பொதுப்படையானவை, நபருக்கு நபர் மாறுபடக்கூடியவை. ஆட்டிசத்தினால் பாதிக்கப்படும் ஒரு நபர் அந்தக்கோளாறு இருப்பதையே அறியாது தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதுண்டு. இந்தக் குறைபாட்டினால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
அறிகுறிகள்
ஆரம்பக் கட்டத்திலேயே 'ஆட்டிசம்' இருப்பதை பரிசோதித்து கண்டறிதல் சிகிச்சைக்கும், மறுவாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்கும் மிக அவசியமானது. மற்ற நோய்களைப் போல் படிப்படியாக ஆய்ந்து அறிய உதவும் முறையான பாரிசோதனைகள் மற்றும் உடல்ரீதயான அறிகுறிகள் ஆட்டிசத்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதத்தை வைத்து அதற்கு இருக்கும் அல்லது இல்லாத சில தன்மைகளை கவனித்துதான் 'ஆட்டிசம்' இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நடத்தை ரீதியான அறிகுறிகள்
• கண்ணோடு கண் நோக்காது பேசுதல், பழகுதல்
• கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காது இருத்தல்
• ஒருவர் சொன்னதையே திரும்ப சொல்லுதல்
• தாமதமாகப் பேசத் தொடங்குதல்
• விளையாட்டில் நாட்டமின்றி இருத்தல்
• முகபாவம், சைகை மூலம் எண்ணங்களை உணர்த்தவோ ஃ உணரவோ அறியாதிருத்தல்
• உறவை  நீடிக்கச் செய்யும் வழிமுறைகள் அறியாதிருத்தல்
• யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்.
• தனியாக இருப்பதை விரும்புதல்.
• காது கேளாது போல் இருத்தல்.
• காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்.
• அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்.
• கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்.
• தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.
• பேச்சுத்திறன் குறைதல்.விரல் சூப்புதல், நகம் கடித்தல்.
• பதட்டநிலை.
• அடம் பிடித்தல்.

தீர்வு
              எதனால் 'ஆட்டிசம்' ஏற்படுகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆரம்பக்கட்டத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம்.
              இதற்கான வழிமுறைகள் குறைபாடுகளின் தன்மையைப் பொறுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பொறுத்தும் வேறுபடும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே இந்தக் குறைபாட்டைக் கவனித்து ஆவன செய்வது பெரிதும் உதவும் என்றாலும் அதற்காக தாமதமாகச் செய்தால் பலன் இருக்கப்போவதில்லை என்று அசட்டையாகவும் இருந்து விடவும் கூடாது.
               ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்றக் குழந்தைகளை போல் இவர்களால், பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை, சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும்.
                             இக்குழந்தைகளுக்கு பெற்றோரின் பங்கு முக்கியம். அவர்களால் தான், இக்குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வர முடியும். இது ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை அவமானம் என கருதக் கூடாது. நாம் நம் குழந்தையை ஏற்று, அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான், இச்சமூக மக்களும் மரியாதை கொடுக்க முன் வருவர். நமது இன்ப, துன்பத்தை அவர்களால் உணர முடியாது. ஒரு துயரமான சூழலில் சிரித்துக் கொண்டிருப்பர். இதற்காக, அவர்களை வெறுக்கக் கூடாது. மூளை குறைபாட்டால்தான், அவர்கள் அப்படி இருக்கின்றனர் என புரிந்து கொள்ள வேண்டும

ஏற்கனவே சொன்னது போல், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்னை இருக்காது. எனவே, நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என, உணர்ந்து சொல்ல தெரியாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும் என்பதால், எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான பயிற்சி முறைகளை வகுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு, அதற்குகேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான்.

       வழக்கமான கல்வி படித்து, மற்றவர்களை போல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால், இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம். இக்குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார் படுத்த வேண்டும்

No comments:

Post a Comment