Sunday, February 14, 2016

துறவிக்கு ஒரு கேள்வி-பெளத்த பிக்கு திரு. சோணா பிக்கு .

துறவிக்கு ஒரு கேள்வி-பெளத்த பிக்கு திரு. சோணா பிக்கு .

மேன்மையை நோக்கிச் செல்லும் மனிதர்கள்;

நீங்கள் மிகவும் தன்னடக்கமுள்ளவராக இருக்க வேண்டிய தில்லை. மேன்மையை நோக்கிச் செல்லும் மனிதர் நீங்கள். 'யார், நானா? இந்த எளியவனான நானா மகத்தானவனாகப் போகிறேன்? கேட்பதற்குச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.' என்று நீங்கள் நினைக்கக் கூடாது. ஒரு சினிமா நட்சத்திரத்தின் பிரசித்தத்தைப் போல நீங்கள் புகழ் பெறுவீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் மனத்தின் மகிமையை உணரப் போகின்றீர்கள். விரிந்த மனம் உடையவராக மாறப் போகின்றீர்கள். மனம் விரிவடைய, விரிவடைய அது முக்கியமான வாய்மைகளைச் சந்திக்கிறது. எல்லா வகையான வாய்மைகளையும் அது சந்திப்பதில்லை. முக்கியமான வாய்மைகளை மட்டுமே அது சந்திக்கிறது.

இப்படி மேன்மையானவராகும் ஒருவருக்குத் தோன்றும் ஒரு எண்ணம்: 'இந்த அறம் உலகிடமிருந்து சிறிதே எதிர்பார்ப்போருக் காகத்தான், அதிகம் எதிர்பார்ப்பவருக்கு அல்ல. முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற பேராசை உள்ளவருக்கு அல்ல.' எதை அடையப் பேராசை? இரண்டு விஷயங்களில்: 1. பணம் 2. புகழ். புகழ் என்பது பதவி, அதிகாரம் என்ற வடிவில் வரலாம். சிலருக்கு இரண்டின் மீதும் கண் இருக்கும். சிலருக்குப் பணம் மட்டுமே தேவை. சிலருக்கு அதிகாரத்தின் மீதே கண்.

பணம் உங்களுக்கு முக்கியம் இல்லையென்றால், அதனால் வாங்கக்கூடிய பொருட்கள் மீதும் உங்களுக்கு அதிக அக்கறை இல்லாவிட்டால், புகழும் அதிகாரமும் உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றா விட்டால், அது போன்ற நோக்கங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் தராவிட்டால் நீங்கள் மேன்மையான நிலையை நோக்கிச் செல்கின்றீர்கள். இது முதலில் பெரிய காரியமாகத் தெரியாது.

அதிகாரம் ஒரு சுமை. யாருக்குத்தான் சுமை தேவைப்படுகிறது? பணம் என்றால் பல சாத்தியங்கள், இல்லையா? இரண்டு சாத்தியங்களுக்குப் பதிலாக பணம் இருப்பதால் பத்து சாத்தியங்கள் உள்ளன. அதிக பணம் என்றால் அதிக சாத்தியங்கள். ஆனால் நினைத்துப் பார்த்தீர்களென்றால் அதிக சாத்தியங்கள் இருப்பதும் ஒரு சுமையைத் தாங்கி இருப்பது போலத்தான். இப்போது எல்லா சாத்தியங்களைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. இவற்றைப் பற்றி மனத்தில் ஓடும் எண்ணங்கள் மன அமைதியைக் குலைக்கின்றன. பிரதிபலித்துப் பார்த்தால் விடுதலையும், அமைதியும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதால் வரப்போவதில்லை. உண்மையில் குறைவான சாத்தியங்களே உங்களை அமைதிக்கு எடுத்துச் செல்லும்.

கிரேக்க சிந்தனையாளர் சாக்ரட்டீஸ் (Socrates) கூறிய முக்கியமான கூற்று: 'மனிதருள் குறைவாக விரும்பியதால் நான் கடவுளுக்கு அருகில் இருக்கின்றேன்.' அவருக்கும் இதே எண்ணம் தோன்றியது. மனிதருள் மிகக் குறைவாக ஆசைப்பட்டவர் என்று தன்னை நினைத்தார். உலகிடமிருந்து மிகவும் குறைவாகவே எதிர்பார்த்தார். அதனால் தெய்வங்களுக்கு அருகில் இருப்பதாக அறிந்தார். உலக சாத்தியங்களில் ஆசை குறையக் குறைய நாம் வேறொன்றை அதிகம் பெறுகிறோம். அதுவே தெய்வீகத் தன்மை. ஆழமான சுதந்திர நிலையை நாம் அடைகிறோம்.

மனம் நம்மை ஏமாற்றப் பார்க்கிறது. இன்னும் ஒரு சாத்தியம் வேண்டும், இன்னும் ஒரு சாத்தியம் வேண்டும் என்று கேட்கிறது இறுதியில், இந்தச் சாத்தியங்கள் எல்லாம் நம்மைச் சோர்வடையச் செய்கின்றன. அவற்றோடு ஏதேனும் ஒரு பிரச்சனையையும் காண்கிறோம். இது திருவிழாவுக்குச் சென்று பல பரிசுகளை வெல்வதுபோல. ஆனால் எல்லாம் மட்டமான பரிசுகள். தரமற்ற பொருட்கள்.

இப்படி இவற்றோடு சோர்வடைவது ஒரு இயற்கையான செயற்றொடர். உலகிடமிருந்து குறைந்தே எதிர்பார்ப்போர் மாபெரும் விடுதலையையும், ஆனந்தத்தையும், பாரமின்மையையும், மகிழ்வையும், வியப்பும் அடைகின்றனர்.

இது ஒரு ஆன்மீக அறிவுப் பரீட்சை. இந்தக் கேள்விக்கான பதிலில் பல சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அறிவாளியாக இருந்தால் பல சாத்தியங்கள் இருப்பதில் விடுதலை இல்லை; பல சாத்தியங்களை விட்டு விடுவதிலேயே விடுதலை இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.
நன்றி - budhhasangham- தொடர்ச்சி அடுத்த பதிவில்

No comments:

Post a Comment