Tuesday, February 23, 2016

மன இறுக்கமும் ஓய்வும்- ஓஷோ- பகுதி-2

மன இறுக்கமும் ஓய்வும்- ஓஷோ- பகுதி-2

பதற்றம் என்பது என்ன, பதற்றம் என்பது நீங்கள் உங்களது எண்ணங்கள் பயங்கள் இவற்றோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதாகும். மரணம், திவால், டாலர் மதிப்பு வீழ்ச்சி இப்படி எல்லாவிதமான பயமும் இருக்கிறது. இவைகள்தான் உங்களது பதற்றம் மேலும், இவை உங்களது உடலையும் பாதிக்கின்றன. உங்களது உடலும் பதற்றம் அடைகிறது. ஏனெனில் உடல் மற்றும் மனம் என்பது, இரண்டும் தனித்தனியாக இருப்பவை அல்ல. உடல் மனம் என்பது ஒரே அமைப்புதான். ஆகவே மனம் பதற்றம் அடையும்போது உங்களது உடலும் பதற்றம் அடைகிறது.

நீங்கள் முதலில் விழிப்புணர்வுடன் ஆரம்பிக்கலாம். அதன்பின்னர் இந்த விழிப்புணர்வு உங்களை உங்களது மனத்திலிருந்தும், மனதோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் இருந்தும் வெளியே எடுத்துவிடுகிறது. உடனே இயல்பாக உங்களது உடல் ஓய்வுடன் இருக்க ஆரம்பித்துவிடும். அப்போது நீங்கள் எதோடும் பற்றிக் கொண்டு இருக்க மாட்டீர்கள். மேலும் விழிப்புணர்வு என்னும் வெளிச்சத்தில் பதற்றம் என்பது இருக்கமுடியாது.

அதே போன்று, நீங்கள் அடுத்த பக்கத்தில் இருந்தும் ஆரம்பிக்கலாம். வெறுமனே தளர்வுடன் இருங்கள். ஓய்வுடன் இருங்கள். அப்போது தானாகவே எல்லாப் பதற்றமும் விட்டு விலகிவிடும். மேலும், நீங்கள் ஓய்வாக இருக்க ஆரம்பித்துவிட்டால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு எழுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவைகள் பிரிக்கமுடியாதவை. ஆனால் விழிப்புணர்வில் இருந்து ஆரம்பிப்பது சுலபம், ஓய்வாக இருப்பதில் இருந்து ஆரம்பிப்பது கொஞ்சம் கடினம். ஏனெனில் நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சியே ஒரு குறிப்பிட்ட பதற்றத்தைக் கொடுத்துவிடும்.

RAJAJI JS. 22022016

No comments:

Post a Comment