Saturday, October 21, 2017

சாகாக்கால் - வேகாத்தலை - போகாப்புனல்

சாகாக்கால் - வேகாத்தலை - போகாப்புனல் விளக்கம் சொன்னவரே குரு!

நம் உடலில் உந்தி, மார்பு மற்றும் நெற்றிக்கண் அல்லது புருவமத்தி என்ற மூன்று முக்கிய மூலங்கள் உள்ளன.

ஒருவன் உடலின் விந்தை வெளியிடாமலும், சுத்த உஷ்ணத்தை அதிகப்படுத்தியும் வர வர உடலில் அருவமதாய் உருவாகிய விந்தானது உடலின் வெம்மையை அதிகப்படுத்தி மூலத்தை முழிக்க வைத்து அவ்விந்து நீரானது நெருப்பாவியாகி உடல் முழுவதும் கலக்கின்றது.

இவ்வாறு நம் விந்தானது எப்பொழுது சூடான ஆவியாக (ஆவியான வன்னி) மாறுகின்றதோ அதுவே போகாப்புனலாகும்.
அதாவது அந்நெருப்பாவியே போகாப்புனலாகும்.

இதுவே சுழுமுனையில் கீழ்மேலாக முதுகுத்தண்டு வடத்தின் மத்தியில் ஏறி இறங்கும்.

இதுவே கிரந்திகள் என்றும் அப்பாதையை கிரந்திப் பாதை அல்லது அட்சரப் பாதை என்றும் அழைக்கப்படுகின்றது.

அனைத்தும் நாதஒலிகளாக வேதங்களாக ஒவ்வொரு மகானின் உள்ளே வந்து தங்குகின்றது. இதுவே இறக்கப்பட்ட வேதம் ஆகும்.

அடுத்து மூன்று மூலங்களில் மார்பாகிய நெஞ்சு மத்தியான அனாகதக் கருவறையில்தான் நாம் விட்ட இடமான ஆகாய வெளியானது இருக்கின்றது.

இதை ஜீவாத்மா என்றும் சித்தர்களால் வேகாத்தலை என்றும் அழைக்கப்படுகின்றது. சிதம்பரம் தில்லை கோவிலின் இடது பக்க ரகசியமும் இதுதானாகும்.

அடுத்தது நாம் தொட்ட இடமான உந்தியெனும் தொப்புளில் குடியிருக்கும் வாசியாகிய பிராணனாகிய தீபமாகிய யோகமாகிய ஞானம் தொட்ட இடமாகிய வாசிவாய்வானது சாகாக்கால் என்றழைக்கப்படுகின்றது.

மூச்சானது நம் சரீரத்தில் உந்தியில்தான் குடியிருக்கின்றது.

வாசியின் இருப்பிடம் தொப்புள் ஆகும்(ஜனன மரண ரகசியம்). தபம், தியானம் செய்யும் தபசிகளுக்கு ஆதாரம் இவ்வாசியாகும்.

இவ்வாசியே பிராணனாகி பிராணனே தீபமாகி சோதியாகும். இவ்வாசியே மூல அனலாகும்.

சாகாக்கால், வேகாத்தலை, போகப்புனல் மற்றும் மணியாடும் கோணம் ஆகியன பற்றி தக்க குருவின் அருகிலிருந்தால் அனுபவத்தில் வரும்.

மணியாடும் கோணம் என்பது போகாப்புனலாகிய நெருப்பாவி புருவமத்தியில் தங்கி பார்வைக்கு ஒளிப்புள்ளியாய் தெரியும்.

அதன் சாய்வு மற்றும் சுழற்சியையே மணியாடும் கோணம் என்பர்.

அச்சோதியையே பரமாத்மா, நந்தி, அருட்பெருந்சோதி, வாலை என்று பலபெயர்களில் அழைக்கப்படுகின்றது.

மேலும் கயிலாயம் என்னும் உச்சி சுழுமுனை வீட்டில் சதா ஓம் காரித்துக்கொண்டு தலையெழுத்தாக இருப்பது நம் உணர்வு.

இவ்வுணர்வானது அசையாதிருந்தால் சிவமாம்,

அசைந்தால் சீவனாம்.

இவற்றில் மூச்சாகவும் பேச்சாகவும் சப்திப்பது சக்தியாகும்.

இவற்றில் சாகாக்கால் சிவமாம்,

வேகாத்தலை சீவனாம்,

போகாப்புனல் சக்தியாம்.

நாதமென்பது ஒருவகையில் நெருப்பாகி மனமாகின்றது.

விந்தென்பது வாசியாகும்.

தீயானது வாசிமீதேறி விளையாடும்.

ஆகாய அம்சத்தில் உள்ள 10960000 விண்மீன்களும், அவற்றில் ஒவ்வொரு விண்மீனிலும் உள்ள ஒளிஒலிக்கதிர்கள் இணைந்து ஒரு உயிரனுவாக மாறி இவ்வாறு 10960000 உயிரனுக்களாக சேர்ந்து ஒரு துளி வித்தானது உருவாகின்றது.

ஒருவன் வெளிமுக நோக்கில்லாது எப்பொழுதும் சதா உள்முக நோக்குடையவனாக இருக்கின்றனோ அவனுக்கு தசவித நாதங்களும், விண்ணிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நாதஓசையும் விளங்கும்.

இதுவே நாதமாகும்.

நாதமானது ஆகாயத்திலிருந்து உற்பத்தியாகின்றது.

இந்த சத்தம் பிறந்து யார் காதில் ஒலிக்கின்றதோ அவனுக்குள் சகல கலையும் உதிக்கும்.

அதே சமயம் விந்தானது உடலின் வெம்மையை கூட்டி அதன் பலனாக ஆவியான வன்னியானது மேலேரும்.

அப்போது விண்ணிலிருந்து தலையில் பிரமரந்திரம் வழியாக நாதமானது(சுரோணிதம்) இறங்கும்.

இவ்வாறு விந்தானது நாதமான சுரோணிதத்தில் கலப்பதையே உறவு என்கின்றார்கள் சித்தர்கள்.

இவ்வுறவில் பிறக்கும் குழந்தை என்பது கண்பார்வைக்கு மத்தயில் தெரியும் சோதியாகும்.

இதையே அருணகிரிநாதர் "நாதவிந்து கலாதி நமோநம" என பாடியுள்ளார்.

இவ்வாறு விந்தையேற்றி தன்னுள் உள்ள சுரோணித நாதத்தில் கலந்து உறவு செய்து ஒளியாகிய குழந்தையை தன்முன் எப்போதும் அந்தரத்தில் வைப்பவன் மட்டுமே தன் பெயருக்குமுன் ஸ்ரீ அல்லது திரு என்ற அட்சரத்தை போட்டுக் கொள்ள தகுதியுடையவன் ஆவான்.

இவனே திருமணம் அல்லது ஸ்ரீ என்ற ஸ்திரியை புணர்ந்தவன் ஆவான்.

நாதம்-பாதம் -- சுரோணிதம் -  முதல்  - ஒலி. விந்து - சுக்கிலம் -  ஒலி முதல். பதம் - முதல் ஒளி -வாலை.

பிரணவ நாதமான மோ, கூ, கீ, அங், மிங், வாசிவாகூஹா, மூ, மௌ, ஓம் போன்ற அட்சரங்களில் ஒன்றை மனதிலும் வெளியிலும் உருவேற்றி அதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி சதா ஆகாய அம்சமான நாதத்தை கேட்டு வந்தால் ஒருநாள் விண்ணில் ஒலிக்கும் நாதத்தை கொடுப்பவனாக யாவருக்கும் வழங்குபவனாக மாறலாம்.

அதன்பின்தான் சூட்சம காரண சரீர சித்திகள் கிடைத்து அந்தி பகலில்லா ஒளியுலகை அடையலாம்.

தெளிவு குருவின் திருநாமம்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!
I
RAJAJI JS

No comments:

Post a Comment