Saturday, June 3, 2017

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது...!!!

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் நாம் தவிர்த்து நடந்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள் என்பது நிச்சயம்.

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, ''உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே'' என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, ''அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்'' என்று சொல்ல நேரிடலாம்.

தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொன்றிடுவேன், தலையை திருருகுவேன், கையை முறிப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், ''அப்பாகிட்டே சொல்லிடாதே'' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே ''அப்பாகிட்ட சொல்லிடுவேன்'' என்று மிரட்டும்.

குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. ''உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒன்றும் தெரியாது'' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. '' கடைக்கும் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்'' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் வாங்கும் போது உயர்ந்த எண்ணங்களை உருவாக்கக் கூடியதாக பார்த்து வாங்குங்கள். கத்தி, வாள், துவக்கு போன்றவை சண்டைக்காரனாகும் எண்ணத்தைப் புகுத்திவிடும்.

படிப்பு விஷயத்தில் குழந்தைகளை கண்டிக்கும்போது, ''பாசிடிவ் அப்ரோச்'' இருக்க வேண்டும். ''நீ நன்றாக படித்தால் டாக்டராகலாம்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்'' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். ''நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்'' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக்கூடாது.

குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

எதற்கெடுத்தாலும் குழந்தையை அடிக்காதீர்கள். அன்பாக சொல்லி திருத்துங்கள். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். ஆக குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கீடுதான் அதிகமாக இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள்.

No comments:

Post a Comment