Friday, May 5, 2017

பிராணயாமம்


==========

உயிர் பலம் சக்தி - தேஜஸ், ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குத்
கூற்றை உதைக்குங் குரியது வாமே
+ திருமூலர்
பொதுவாக யோகத்தில் மூன்று விதமான மூச்சுகள் கூறப்படுகின்றன
1. தோள்பட்டை சுவாசம்
2. மார்பு சுவாசம்
3. அடிவயிற்று சுவாசம்
நம் பிராணன் என்னும் உயிர்நிலை சக்தியினை வசப்படுத்தச் செய்யும் கலை இது. பிராணயாமத்தின் மூலம் தச வாயுக்களும் சீரடையும்.
பிராணயாமத்தின் நான்கு படிகள்
பூரகம் - மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம் - மூச்சை உள் நிறுத்துதல்
ரேசகம் - மூச்சை வெளிவிடுதல்
சூன்யம் - மூச்சை வெளிவிட்ட பின் கும்பகத்தில் உள்நிறுத்துதல்
பிராணயாமத்தின் பலன்கள்
மனஅழுத்தம் நீங்குகிறது. உடல் அசதி மற்றம் மன சோர்வு நீங்கி சுறுசுறுப்பு மேலோங்குகிறது.
உளவியல்ரீதியான பாதிப்பின்றும் 75% விழுக்காட்டிற்கு மேலாக முன்னேற்றம் ஏற்படும்.
ரத்தஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் வலிமை பெறும். மூளையில் ரத்தஓட்டம் மிகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் நம் உடலைவிட்டு முழுவதும் நீங்கும்.
நம் உடலை, மனதை ஆரோக்கியமாகவும், முறையே வலிமையாகவும், வளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
அளவுக்கதிகமான உடல் கொழுப்பைக் கரைத்து விடும்.
ஆயுள் அதிகரிக்கும். நினைவாற்றல் மிக மிக அதிகரிக்கும்.
நம் வயிறு, கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களை வலிமையாக்கி சீரண மண்டலத்தைச் சீராக்கும்.
குரல் வளம் மிகும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். அலைபாயும் மனது ஒடுங்கி தன்னம்பிக்கை மிகும்.
உள்ளொளி பெருகும். (ஆன்மிக உணர்வு) மேலோங்கி மனஆற்றல் சிறக்கும்.
சுத்தமான, காற்றோட்டமுள்ள இடத்தில் பயிற்சி செய்ய வேண்டும். தனிமையில் அமைதியாக பயிற்சி செய்ய வேண்டும்.
அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஓசோன் பரப்பினின்றும் (உயிர்க்காற்று) மிகுந்திருக்கும் வேளையில் செய்வது மிக நல்லது.
வெறும் வயிற்றில் அல்லது அரை கப் சுத்தமான நீரை அருந்திப் பின் செய்ய வேண்டும்.
பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற அமர்ந்த நிலை ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் யோகம், பிராணயாமம் செய்வதே நல்லது.
இரவு விழித்திருந்தாலோ, களைப்பாக இருந்தாலோ பிராணயாமம் செய்யக்கூடாது.
நம்முடைய ரத்த நாளங்கள் சுத்திகரிக்கப்பட்ட பின்பே பிராணயாமம் செய்ய வேண்டும்.
எனவே ஆசனம் செய்து ரத்த நாளங்களைச் சுத்திகரித்து விட்டுப் பின் பிராணயாமம் செய்வது நன்று.
எச்சரிக்கை: பயிற்சியாளரின் உதவியின்றி எந்த பிராணயாமப் பயிற்சிகளும் செய்யக்கூடாது.
இதய நோயாளிகள் கும்பக நிலையில் மூச்சை உள்நிறுத்துதல் மிக குறைந்த அளவே இருக்க வேண்டும்.
அல்லது நோயின் தன்மைக்கேற்ப கும்பகம் செய்யாமல் இருப்பது நல்லது. அதே போல ரேசகம் குறைந்த மாத்திரையில் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment