Thursday, May 25, 2017

குரு மகான்கள்...!!! அருணகிரிநாதர்.

இளமை வேகத்தில் தவறுகள் பல செய்து உடல் ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட்டவர் அருணகிரிநாதர்.தொழுநோய் பற்றிய நிலையிலும் பரத்தையினரைத் தழுவிடும் வேட்கையை மட்டும் விட்டாரில்லை. தமக்கையின் ஆதரவில் வாழ்ந்து வந்த அவர், வறுமையால் வாடிய போதும், வக்கிர உணர்வில் என்றுமே வாடியதில்லை.

தீயொழுக்கம் உடலை உருக்கிய நிலையிலும் மெய் சுகத்திலிருந்து மீளாத அருணகிரிநாதர், தமக்கையிடம் அந்தச் செலவுக்குப் பணம் கேட்க,  அரிசியாலன்றி, ஒலியாலேயே நிரம்பிய கலயங்களைப் பார்த்து மனம் வெதும்பி, தம்பிக்கு கொடுக்கப் பணமில்லையே என்ற ஏக்கத்தில் பரிதவித்தாள். ‘தம்பி, உனக்கு எதற்காகப் பணம் வேண்டும்?

பெண் சுகத்துக்காகத் தானே! என்னிடம் பணமில்லை. ஆனால், பரவாயில்லை; என் உடலைத் தருகிறேன், எடுத்துக் கொள்’ என்று இரு கரம் நீட்டி அவரை அழைத்தாள்.அந்த நொடியில் ஞானோதயம் பெற்றார் அருணகிரிநாதர். பெண் என்றால் தாய், தமக்கை எல்லோருமே பெண்தானே! அதாவது, உலகத்துப் பெண்களையெல்லாம் தாயாக, தமக்கையாக பாவிக்க வேண்டும் என்பதுதானே வாழ்க்கை நெறி?

அருணகிரியார் அகம் தெளிந்தார். முருகனை நாடினார். உருகினார். செய்த பாவங்களெல்லாம் கரைந்தோடுமாறு அழுது கண்ணீர் பெருக்கினார். முருகன் மயில் மீது அமர்ந்தபடி காட்சியளித்து அவருக்கு உவகை ஊட்டியதுடன் உடல் நோயெல்லாம் நீங்கச் செய்தார்.அந்நாளில் திருவண்ணாமலை பிரதேசத்தின் ஆஸ்தான பண்டிதனான சம்பந்தாண்டானுக்கு அருணகிரியார் மீது ஆறாத பொறாமை ஏற்பட்டது.

அவருடைய ஞானம், முருக தரிசனத்துக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட தெய்வீகப்புலமை இவற்றால் அழுக்காறு கொண்ட அவன், அவரை தொலைத்துவிடத் தீர்மானித்
தான். திருப்புகழ் பாடி முருக தத்துவத்தைப் பரப்பிய பாவலர், வில்லிபுத்தூராரின் கல்விச் செருக்கை அடக்கியவர் என்று அவர் பெரிதும் புகழ்ப்படவே அதை தனக்கு
பிறர் செய்யும் அவமரியாதையாகவே நினைத்தான் சம்பந்தாண்டான்.

அரசனைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு அந்த செல்வாக்கில், ‘அரசருக்குப் பெரிதும் விருப்பமான பாரிஜாத மலரைக் கொண்டு வாருங்கள்’ என்று அவருக்கு ஆணையிட்டான். அவனுடைய ஆணைக்குப் பின்னால் ஏதோ சதியிருப்பதை உணர்ந்த அருணகிரியார், துணிவுடன் ஒரு முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலுக்குள் கூடு பாய்ந்தார். பறந்து சென்றார்.

பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்தார். மன்னனிடம் சமர்ப்பித்தார். இடைப்பட்ட காலகட்டத்தில் சம்பந்தாண்டான் தந்திரமாக ஒரு வேலை செய்தான். அருணகிரியாரின் உடலைச் சுட்டிக் காட்டி, ‘பாரிஜாத மலர் கொண்டு வரும் முயற்சியில் தோற்றுவிட்டதால் தற்கொலை செய்து கொண்டார்’ என்று புனைக்கதை கூறினான். அது மட்டுமன்றி, ‘தம் பிரேதத்தை எரிப்பதில்தான் அருணகிரியாருக்கு விருப்பம்’என்றும் கூறி, அவர் உடலுக்கு எரியூட்டி விட்டான்.கிளி ரூபமாக வந்த அருணகிரியார், தன் உடலின் சாம்பல் மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டு கிளி உருவத்துடனேயே முருகனை அடைந்தார் என்கிறது புராணம்.

பட்டினத்தார்

கப்பல் கப்பலாய் திரவியம் கொண்டு வருவான் திரைகடல் ஓடிய மகன் மருதவாணன் என்று ரொம்பவும்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருவெண்காடர்.ஆனால், மருதவாணன் கப்பல் நிறைய எரு மூட்டைகளையும் தவிட்டு மூட்டைகளையுமாகக் கொண்டு வந்ததைப் பார்த்து துக்கித்துப் போனார்.

ஆத்திரத்துடன் மகனைப் பிடித்தார். ‘‘என்ன இது?’’ என்று கோபம் கொப்புளிக்கக் கேட்டார்.‘‘பிரித்துப் பாரும்’’ என்று அலட்சியமாகச் சொன்ன மகன் அங்கிருந்து புறப்பட்டான்.இத்தனைக்கும் மருதவாணன், திருவெண்காடரின் சொந்த மகனல்ல. வளர்ப்பு மகன்.

அவன்தான் இப்படிக் கப்பல் முழுக்க வரட்டியையும், தவிட்டு மூட்டைகளையும் கொண்டு வந்திருக்கிறான்!ஆத்திரமுற்ற திருவெண்காடர், ஒரு வரட்டியை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தார்.உள்ளிருந்து ரத்தினக் கற்கள் தெறித்து வந்து விழுந்தன. இப்படியே ஒவ்வொரு வரட்டியிலும்! தவிட்டு மூட்டை முழுவதிலும் பொன் துகள்கள்!

தம் வணிகப் பரம்பரையின் பெயர் விளங்க வந்த பிள்ளை என்ற உற்சாகத்தில் மகனைத் தேடிக் கொண்டு வீட்டிற்குப் போனார். அங்கே, மனைவி ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தாள். அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. அப்படி எழுதிக் கொடுத்துவிட்டு மருதவாணன் எங்கோ மாயமாய் மறைந்தவாணனாகி விட்டான்.

சுரீரென்றது திருவெண்காடருக்கு. உண்மைதானே! போகும்போது எதை எடுத்துச் செல்லப் போகிறோம்? உயிர் உடலை, நீங்கும் போது அதுவரை குடி
யிருந்த உடலையும் அப்படியே விட்டுவிட்டுத்தானே போகவேண்டும்? வேறு எதைத்தான் அது கொண்டு செல்ல முடியும்?மனசிலிருந்த ஆசாபாசங்கள் கழன்று ஓட, உடலிலிருந்து ஆடைகளும் கழன்று வீழ்ந்தன. நாகரிகம் கருதி கோவணம் மட்டுமே அணிந்த அவர், அன்றே மனைவி, உற்றார், உறவினர், சொத்து, திரவியம் அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

துறவியாய்ப் போனவன் மீண்டும் சொத்து நாடி வரலாமோ என்ற ஐயத்துடன் அவருடைய ஒரே தமக்கை அவருக்கு விஷம் பொதிந்த பணியாரம் ஒன்றைத் தந்து அனுப்பினாள். சூட்சுமம் புரிந்து கொண்ட, இப்போது பட்டினத்தாராகிவிட்ட திருவெண்காடர், அந்த பணியாரத்தை தமக்கையின் வீட்டு ஓலைக் கூரை மீது எறிய, கூரை ‘குப்’பென்று தீப்பற்றி எரிந்தது. அதோடு, தனக்கும் தன்னுடைய சொத்துகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டார்.

துறவிக்கு சொந்தமில்லை, பந்தமில்லை என்ற நியதியைத் தன் தாயைப் பொறுத்தவரை உடைத்தெறிந்தார் பட்டினத்தார். பந்தம் எல்லாவற்றையும் அறுத்தெறிந்தாலும் பூவுலக பந்தம் விட்டுச் செல்லும் தாய்க்கு மகன் இறுதிக்கடன் செய்ய வேண்டியது கடமை என்றுணர்ந்தார்.

அதனால்தான் யார் உதவியும் இல்லாமல் பச்சை வாழை மரங்களை எரிய வைத்து தாயின் சிதைக்கு தீ மூட்ட அவரால் முடிந்தது.பட்டினத்தார் சென்னை திருவொற்றியூரில் கடற்கரை மணலில் உயிரோடு புதைந்து அப்படியே சமாதியாகி விட்டதாகவும், பிறகு சுயம்பு லிங்கமாக அவர் வெளியே வந்ததாகவும் கூறுகிறார்கள். பட்டினத்தார் ஜோதிமயமாக இறைவனுடன் ஐக்கியமானார் என்றும் சொல்வார்கள்.

ராமலிங்க அடிகளார்

சமரச சன்மார்க்கம் - மனித இனத்திலேயே உள்ள பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் கண்டு வருந்திய ராமலிங்க சுவாமிகள் துவங்கிய சங்கம் இது. ஆனால், அவருக்குப் பிறகு அவருடைய உள்ளுணர்வுகளின் அழுத்தம் பிறரிடம் பிரதிபலிக்காததால் அந்த இயக்கம் உலகம் முழுமையும் பரவ இயலவில்லை.

ஆனாலும் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் புகழும், அவருடைய கொள்கைகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.அடிகளை அறிவோமா?

நூற்று எழுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் ஒளிர்ந்த ஜோதி அவர். சிதம்பரம் அருகே மருதூரில் ராமய்யப் பிள்ளை - சின்னம்மாள் தம்பதியரின் ஐந்தாவது குழந்தை
ராமலிங்கர்.முலைப்பால் உண்ணும் பருவத்திலேயே முக்தி ஞானம் பெற்ற தவப்புதல்வர் அவர். சிதம்பரத்தில் தில்லை நடராசன் சந்நதி எதிரே கூப்பிய கரங்களும், ஒன்றிய மனதுமாய் ராமய்யப் பிள்ளை தம்பதி. தந்தையின் கை மடிப்பில் ராமலிங்கர் ஆரோகணித்து நெஞ்சிலே சாய்ந்திருந்தார்.

கற்பூர தீபம் நடராஜரின் தேஜஸை விகசித்துக் காட்டியது. அனைவரும் உள்ளம் உருக, மெய் நெகிழ பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தபோது அந்த மழலைச் சிரிப்பு, தெய்வீக மணியோசையின் பிரதிபலிப்பாக அனைவரையும் கவர்ந்தது. நடராசன் நகைப்பூட்டினாரா? கற்பூர ஒளி கிச்சு கிச்சு மூட்டியதா? இறைவன் திருவிளையாடல் போல நடந்த அந்தச் சம்பவமே ராமலிங்கனாரின் தெய்வீகத் தன்மையை வெளிக்காட்டியது.

தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த அண்ணன் சபாபதியின் ஆதரவில் வாழத் துவங்கினார் ராமலிங்கனார். பள்ளிக்குச் செல்வதை வெறுத்தார். அதனாலேயே தமையனாரின் கோபத்திற்கும் ஆளானார். ஆனால், ஏட்டுச் சுரைக்காயைச் சுவைக்காத அவர், கேட்டுப் பெறும் அறிவையெல்லாம், கேளாமலேயே, படிக்காமலேயே பெற்றார். படிப்பதற்கென்றே தனியறை ஒதுக்கப்பட்டிருந்தாலும் அங்கும் இறை உணர்வுடனேயே வாழ்ந்து வந்தவர் அவர்.

அறையிலே பாடப்புத்தகங்களுக்கு பதிலாக விளக்கு, சாம்பிராணி, கற்பூரம் என்று பூஜை சாமான்களும், பழம், இனிப்பு என்று நைவேத்யப் பொருட்களும் நிறைந்திருந்தன. சுவரிலே ஒரு கண்ணாடி. அந்தக் கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார் ராமலிங்கர். எதிரே இருக்கும் உருவத்தை பிரதிபலிப்பது கண்ணாடியின் இயல்பு. ஆனால்,  இவரிடமிருந்த கண்ணாடி காட்டியது அழகு முருகனின் ஆனந்தக் கோலம்!

கண்ணாடியே முருகன் படம்! அதற்கே பூஜை வழிபாடு. ஆராதனை...! ஒன்பது வயதில் யாருக்கும் கிடைத்தற்கரிய பேறு! ஆறுமுகங்கள், கடம்ப மாலையணிந்த பன்னிரு தோள்கள், கையில் கூர்வேல். பெருமாளைத் தாங்கும் பெருமையுடன் மயில், நெடிதுயர்ந்த சேவல்கொடி என்று தான் கண்ட தரிசனத்தை விவரிக்கிறார் அடிகளார்.

ராமலிங்கரின் முதல் சீடர் என்று தொழுவூர் வேலாயுத முதலியாரைச் சொல்லலாம். பள்ளிக்கூடத்தை எட்டிக் கூடப் பார்க்காத ராமலிங்கரை சோதிப்பதற்காக வந்தவர், சிலேடையாக நூறு பாடல்களைத் தாமே இயற்றி, அவை எல்லாம் சங்ககாலப் பாடல்கள் என்று கூறி வள்ளலாரிடம் சமர்ப்பித்தார்.

அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் படித்த ராமலிங்கர் உடனேயே சொல்லிவிட்டார்: ‘‘இது யாரோ ஒன்றும் தெரியாத அறிவிலி எழுதியது. இவ்வளவு பொருட்பிழை, இலக்கணப் பிழைகள் சங்கப்பாடல்களில் காணக் கிடைக்காது!’’ பிடரியில் அடித்த வேதனையை உணர்ந்தார் முதலியார். உடனே வள்ளலாருக்கு சீடரானார்.

சென்னைவாசியான ராமலிங்கனார் இங்கு தழைத்த ஆன்மிக நெறிகளைப் புகழ்ந்து, ‘தருமமிகு சென்னை’ என்று பாடினார். ஆனால், ‘அவர்’ காலத்திலேயே ஆத்திகம் பலவீனப்பட்டு, நகர மக்களின் பொய் நிறைந்த வாழ்க்கையைக் காண நேர்ந்தது.

இந்நிலையைச் ‘சிறிதும் நான் ஊன்றிப் பார்த்ததே இல்லை’ என்று சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார் அடிகளார்.நகரின் மீது ஏற்பட்ட வெறுப்பால் ஒதுங்கிப் போய் ஏதேனும் கிராமத்தில் வாழ்க்கையை நடத்துவது என்ற முடிவுக்கு வந்த அவர் தேர்ந்தெடுத்தது வடலூர் கிராமத்தை.

தன் தேவைக்கேற்ற உதவியை ஓரிரு நண்பர்களிடமிருந்து மட்டுமே கோரிப் பெற்றார் ராமலிங்கனார். ஆனால், அவருக்கோ கொட்டிக் கொடுக்கத் தயாராக எல்லோருமே இருந்தார்கள். தன் எச்சரிக்கையையும் மீறி தன் தேவைக்கும் மிகுதியாக கொடுக்கப்பட்டது என்றால், தேவையில்லை என்று தோன்றிய பணத்தையும், பொருளையும், கிணற்றிலோ, குளத்திலேயோ எறிந்து விடுவார் ராமலிங்கனார்.

‘‘இரண்டு காதுகளையும், மூக்கையும் படைத்த இறைவன், மனிதர் நகையணிவது தனக்கு உடன்பாடுதான் என்றிருந்தால் ஆண்களின் காதுகளிலும், பெண்களின் மூக்குகளிலும் ஓட்டைபோட்டே படைத்திருக்கமாட்டாரா?’’ என்று கேலியாகக் கேட்பார்.தான் இயற்றும் பாடல்கள், தான் சொல்லும் கருத்துகள் எதுவும் புத்தக வடிவில் வெளியாவதை வள்ளலார் விரும்பியதில்லை. அப்படிப்பட்ட தற்புகழ்ச்சி தனக்கு வேண்டாம் என்பார் அவர்.

ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூர் கோயிலுக்கு எப்படி தினமும் நடந்துபோய் வந்து கொண்டிருந்தாரோ அதே போல ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள கந்தக் கோட்டத்திற்கும் போய் வந்தார். கந்தக் கோட்டத்தில் முருகன் சந்நதிக்கு எதிரே அமர்ந்து அவர் பாடிய பாடல்களை அதே கோயிலில் பணியாற்றிய ஒருவர் குறித்து வைத்துக் கொண்டு பின்னாளில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். நூலின் பெயர் ‘சென்னை கந்தர் தெய்வ மணிமாலை’.

அதே போல தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் ரத்தின முதலியார் இருவரும் வள்ளலாரின் பிற பாடல்களைப் புத்தகமாக கொண்டு வர அனுமதி கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார். ரத்தின முதலியார் உண்ணா நோன்பு மேற்கொண்டு வள்ளலாரின் கருணையையும் அனுமதியையும் பெற்றார்.

எதிர்மறைப் பொருளையும் நேர்மறையாக்கிய வள்ளல் அவர். இந்தப் பாடலைப் பாருங்கள்: ‘வேண்டாம்’ என்பதையெல்லாம் ‘வேண்டும்’ என்று எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும்.’

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஏழு வயதிலேயே ஞானத் தேடலில் ஈடுபட்ட மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர். உலகே வியந்து போற்றும் விவேகானந்தர் போன்ற ஆன்மிகச் சீடர்களைப் பெற்றவர். கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலுள்ள கமார்புகூர் என்ற கிராமம், இவர் பிறப்பால் மேன்மை பெற்றது. கொல்கத்தா நகரமோ இவரைத் தன்னிடம் குடியமர்த்தி வளர்த்ததால் சிறப்பு பெற்றது. சுதிராம்-சந்திரமணி தம்பதியருக்கு அருந்தவப்புதல்வராகப் பிறந்தவர். இயற்பெயர்: சுதாகரன்.

சிறு வயது முதலே இறையருள், துறவு, ஆன்மிக போதனை என்று பக்குவப்பட்ட மனதுடன் உலகை உய்விக்க வந்தவர் ராமகிருஷ்ணர்.வாழ்க்கைத் தத்துவங்களை எளிய சொற்களில், பளிச்சென்று புரியும் கதைகள் மூலமாகவே சொல்லி மக்களை நல்வழிப்படுத்த முனைந்தவர். உலகெங்கும் இவருடைய போதனைகள் பெரிதும் போற்றப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.

மனைவியையும் இறை ஸ்வரூபமாகவே கண்டு அவருக்கு காளி பூஜை செய்த மகான் ராமகிருஷ்ணர். மனைவி சாரதாதேவியும் இல்லறப் பற்றின்றி கணவருடைய நெறியிலேயே ஆன்மிக சித்தாந்தங்களில் தன்னை முற்றிலுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

மக்கள் ஆன்மிக உணர்வு மேற்கொள்ள ராமகிருஷ்ணர் கூறிய கதைகள் நிறைய உண்டு. அவற்றில் ஒன்றை இங்கே காணலாம்:தினம் தினம் மீன் பிடித்து, சொற்ப வருமானத்தில் திருப்தியில்லாமல் உழன்று கொண்டிருந்தான் ஒரு மீனவன்.

நிறைய செல்வம் வேண்டும்; உலக சுகம் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையில் மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, பிறர் வீடுகளில் புகுந்து பொருட்களைத் திருட ஆரம்பித்தான்.  துவக்க பயம் அகன்று, பிறகு யாரிடமும் பிடிபடாத வாய்ப்புகளால் துணிச்சல் பெற்று, திருட்டுத் தொழிலை அமர்க்களமாக நடத்திக் கொண்டிருந்தான்.

அந்த முறையில் ஒரு ஜமீன்தாரின் தோட்டத்திற்கு புகுந்தான் திருடன். அவனால் ஏற்பட்ட கலகலப்பில் தோட்டக் காவலர்கள் விழிப்படைந்து அவனைப் பிடிக்க ஓடோடி வந்தார்கள். அதைப் பார்த்துப் பயந்த அவன், ‘கடவுளே, இந்த ஒரு முறை என்னைக் காப்பாற்றி விடு, இனி திருட்டுத் தொழிலுக்கே முழுக்குப் போட்டு விடுகிறேன்’ என்று வேண்டிக் கொண்டான் அவன். உடனே ஓர் எண்ணம் தோன்றியது.

அங்கே பக்கத்தில் காய்ந்த மரங்களையும் கிளைகளையும் எரித்துப் போட்டிருந்தார்கள். அவன் தன் உடைகளைக் களைந்தான். வெறும் கோவணத்துடன், எரிந்து பரவியிருந்த சாம்பலை எடுத்துத் தன் உடலெங்கும் பூசிக் கொண்டான். பிறகு ஒரு சந்நியாசி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பது போல் அமர்ந்து கொண்டான்.

திருடனைத் தேடி வந்த காவலர்கள், சலனமில்லாமல் அமர்ந்திருக்கும் சந்நியாசியைக் கண்டார்கள். அவனை ஒரு பெரிய யோகி என்று கருதினார்கள். அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினார்கள். விவரம் தெரிந்துகொண்ட  ஆன்மிகவாதியான ஜமீன்தார் ஓடோடி வந்தார். திருடன் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

பூக்களையும் பழங்களையும் காணிக்கையாகத் தந்தார். அது மட்டுமல்ல; அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் ஒரு யோகி, தம் தோட்டத்தில் தரிசனம் கொடுப்பதை தெரிவித்து, அவர்களனைவரையும் அவருடைய ஆசி பெற அழைத்தார்.

திருடனை சாமியாராகப் பாவித்து வழிபட கூட்டம் நெருங்கியடித்தது. நெகிழ்ந்து போனான் திருடன். பெரிய தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்த தனக்கு இப்படி ஒரு மரியாதையும், மதிப்பும் இருக்கிறதே என்று பிரமித்தான். வெறும் வேடத்திற்கே இவ்வளவு மதிப்பு என்றால் உண்மையாகவே துறவியானால், இறையின்பத்தை எளிதாக அடைந்து விட முடியுமோ என்று கருதினான் அவன். ‘என்னிடம் கடவுளை எதிர்பார்த்துதானே மக்கள் எனக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள்!

வெளியே நான் யோகி; உள்ளுக்குள்ளேயோ போகி! என் வெறும் புறத்தோற்றமே இத்தனை மதிப்புகளை அளிக்கக் கூடும் என்றால், உள்ளேயும் நான் யோகியானால், உயர்ந்ததொரு பேரின்பமாக அந்த இறைவனையே கண்டு மகிழலாமே!’ என்று கருதினான். அந்த சிந்தனை அவனை எல்லா உலக இன்பங்களையும் துறக்க வைத்தது.மறுநாள் சாமியாரை நாடி வந்தவர்களுக்கு ஏமாற்றம்! அவனைக் காணோம். ஆமாம், அவன் உண்மை துறவியாகி மக்களால் எட்டமுடியாத தொலைவில் கானகத்திற்குச் சென்று தவம் செய்ய போய்விட்டான்(ர்).

அன்னை சாரதாதேவி

இல்லறத் துறவிகளில் ஆண்களுக்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ராமகிருஷ்ண பரமஹம்சர். அதேபோல பெண்களில் அன்னை சாரதாதேவி.
ஒன்றுமே அறியாத பால பருவத்திலேயே தன்னுடைய கணவராக ராமகிருஷ்ண பரமஹம்சரை அடையாளம் காட்டிய சாரதாதேவி, அவரை மணமுடித்த பின்னர்,

அவர் அடியொற்றி கணவரின் ஆன்மிக வாழ்வுக்கு மட்டும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாரே தவிர சிறிதுகூட லௌகீக வாழ்வில் நாட்டம் கொண்டவரில்லை. இந்த உறவு முறை, திருமண பந்தம் தெய்வீகமானது. அதனால்தான் ஊரறிய திருமணமானாலும் கணவன் - மனைவி இருவரும் ஆன்மிகத் தொண்டிலேயே தம் வாழ்நாளை செலவிட்டனர்.

சாரதாதேவியின் பிறந்த ஊரான ஜெயராம்பாடியிலிருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் காமார்புகூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில்தான் ராமகிருஷ்ணர் அவதரித்தார். அன்னை பராசக்தி உபாசகரான அவருடைய அபரிமிதமான பக்தி. ‘கிறுக்குத்தனம்’ என்று விமர்சிக்கப்பட்டது.

ஆனாலும் அவர் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காளியன்னை மீதான பக்தி அவருக்கு மேலும் மேலும் பெருகிக் கொண்டுதான் போயிற்று.

இந்த இரு கிராமங்களுக்கும் இடையே சிகோர் என்று ஒரு கிராமம். அங்கே ஒரு தெருக்கூத்து நடைபெற்றது. தன் மடியில் அமர்ந்திருந்த சாரதையை வயதான பெண்மணி ஒருத்தி கொஞ்சலாக சீண்டினாள். ‘‘நீ கல்யாணம் செய்துக்கறதாக இருந்தா யாரை செய்துப்பே?’’பளிச்சென்று சாரதையின் பிஞ்சுக்கரம் நீண்டது.

அதன் ஆள்காட்டி விரல் சுட்டிய இடத்தில் ராமகிருஷ்ணர் அமர்ந்திருந்தார்! மற்றவர்களின் கேலிக்கும், சிரிப்புக்கும் ஆளானாள் இரண்டே வயது நிரம்பிய சாரதை. இல்லையா பின்னே! தன்னைவிட சுமார் இருபது வயது மூத்த ஒருவரைத் தன் கணவராக வரிப்பது என்றால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவா இருக்கிறது?

ஆனால், ராமகிருஷ்ணரும், தனக்கான திருமண பேச்சும் அது தொடர்பான அலைச்சலும் தன் வீட்டில் பெருகியதைக் கண்டு, ‘‘எங்கெங்கோ ஏன் அலைந்துகொண்டிருக்கிறீர்கள்? ராமச்சந்திர முகர்ஜியின் மகள் எனக்காகக் காத்திருக்கிறாள் போய் மணம் பேசிவிட்டு வாருங்கள்?’’ என்று
சாரதையைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

திருமணம் ஆயிற்று. தன் மனைவியாகிய சாரதையை காளி அன்னையின் சொரூபமாகவே கண்டார் ராமகிருஷ்ணர். ஒரு அமாவாசை இரவில் சாரதையை அன்னையாகவே வழிபட விரும்பினார் ராமகிருஷ்ணர். ஒரு மனையில் சாரதையை அமரச்செய்து மலர் மாலையிட்டு, உதிரிப்பூக்களால் காளிதேவிக்கு அர்ச்சனை செய்வதுபோலவே செய்தார் ராமகிருஷ்ணர். ‘அன்னை’ முன் வணங்கித்தொழுது பூஜையை முடித்தார்.

இந்த அனுபவத்தில் தன்னுள் ஒரு தெய்வாம்சம் புகுந்ததை  சாரதையால் உணர முடிந்தது. உடல்மீதான பற்றை விலக்கி ஆன்மிகத் தொண்டிற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சாரதை.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு சிறிய அறையில் அன்னை சாரதாதேவி வசிக்கத் துவங்கினார்.

தினமும் கங்கையில் நீராடி, தன் அறையிலேயே நீண்ட நேர தியானத்தை மேற்கொள்வார். ராமகிருஷ்ணருக்கு உணவு தயாரித்து அளித்த பிறகு தானும் உணவருந்துவார். மாலையில்  எண்ணெயிட்டு  விளக்குகளை ஏற்றி வைத்து தியானத்தில் ஈடுபடுவார். அதன்பிறகு ராமகிருஷ்ணருக்கான இரவு உணவைத் தயார் செய்வார்.

இதுதான் அன்னை சாரதையின் ‘குடும்ப’ வாழ்க்கை, ‘அவருடைய ஆன்மிக’ வாழ்க்கை எப்படியிருந்தது?ராமகிருஷ்ணர் தம் சீடர்களோடு, ஆடிப்பாடி இறையுணர்வில் ஆழ்ந்திருக்கும் சமயங்களில் - ஏன் தினமுமே அப்படித்தான் - அன்னையால் அவரை நெருங்க முடியாது. அந்த நாட்களில் தன் அறையிலிருந்த தடுப்புத் தட்டியில் ஓர் ஓட்டை போட்டு அதன் வழியாக ராமகிருஷ்ணரை தரிசிப்பார்.ராமகிருஷ்ண பரமஹம்சர் நோய்வாய்ப்பட்டார். அவர் முக்தியடையும் முன், தான் ஆற்றிவந்த பொறுப்புகளையெல்லாம் இனி அன்னையே மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தன்னுடைய ஐம்பத்தேழாவது வயதில் 21.7.1920 அன்று அன்னை தம் சீடர்களைத் தவிக்க விட்டுவிட்டு இம்மண்ணுலகை நீத்தார். கயாவிலுள்ள பேலூர் மடத்திற்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. கங்கைக்கரையில் அக்னி அவ்வுடலை ஆட்கொண்டது. அதே இடத்தில் உருவாகியிருக்கும் ஒரு கோயில் இன்றும் அன்னையின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

விவேகானந்தர் கொல்கத்தா நகரின் பெருமை, இவர் பிறப்பால் மேலும் சிறப்பு கண்டது. 1863ம் ஆண்டு இந்தத் தவப்புதல்வன் அவதரித்தார்.இந்தியாவின் கிழக்கு ஓரத்தில் பிறவி எடுத்த இவர், உலகம் முழுவதையுமே தன் கருத்து ஆற்றலினால் வசீகரித்தார். எல்லாத் துறைகளிலுமே முன்னேறி உலகுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்காகூட, ஆன்மிகத் துறையில் அதன் பார்வை இந்தியாவில் லயித்துவிடக் காரணமாக இருந்தவர் இவர்.

அந்த நரேந்திரநாத் தத்தர்தான் விவேகானந்தர்.படிப்பு, விளையாட்டு, இசை என்று பல துறைகளிலும் வித்தகராகத் தம் பால்ய பருவத்திலேயே விளங்கியவர். நினைவாற்றல் இவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம். என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை முற்றிலும் அப்படியே நினைவில் இருத்தி, பலர் புருவங்களை உயர்த்தியவர்.

ஆன்மிக நெறியில் ராமகிருஷ்ண பரமஹம்சரை ஆசானாகக் கொண்டவர். தன்னுடைய முப்பத்தொன்பதாவது வயதில் 1902ம் ஆண்டு உலகெங்கும் லட்சக்கணக்கான சீடர்களைப் பரிதவிக்க விட்டு விட்டு இம்மண்ணுலகை நீத்தார்.இளைஞர்களுக்கு விவேகானந்தர் ஓர் உதாரண புருஷர். தன் வாழ்நாளில் தீரத்துடன் அவர் சந்தித்த நிகழ்ச்சிகள் ஏராளம்.

மனஉறுதி, எதற்கும் அஞ்சாத திடசிந்தனை, நியாயத்துக்காகப் போராடும் குணம், அதேசமயம் தகுதியானவர் மீதான கருணை, பெரியோர்களுக்கு மரியாதை, தேசப்பற்று, ஆழ்ந்த ஆன்மிக ஞானம் இவற்றின் மொத்த உருவம்தான் அவர்.அவர் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களைப் பார்க்கலாமா?

விவேகானந்தர் பல சமஸ்தான மன்னர்களுக்கு உற்ற நண்பராக இருந்தார். அதைவிட, அந்த மன்னர்கள் அவருடன் தாம் நட்பு வைத்திருப்பதில் பரிபூரண சந்தோஷம் அடைந்தார்கள். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தார்கள். ஆனால், இப்படி உதவி பெற்ற விவேகானந்தரை பிறர் விமர்சித்தார்கள். ‘அவர்களைச் சார்ந்து நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு விவேகானந்தர் நேரடியாக, தெளிவாக பதில் சொன்னார்: ‘‘நான் மன்னரைச் சார்ந்திருக்கிறேன் என்று விமரிசிப்பதைவிட, என் கருத்துக்கு அவரை உடன்படச் செய்கிறேன் என்று ஏன் சொல்லக்கூடாது?

ஆயிரக்கணக்கான மக்களை ஆளும் பொறுப்பில் அவர் இருக்கிறார். அவரிடமுள்ள ஏராளமான செல்வம், அந்த மக்களுக்கெல்லாம் போய்ச்சேர வேண்டும் என்பது என் நோக்கம். மன்னரை என் பக்கம் திருப்புகிறேன் என்றால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மறைமுகமாக உதவுகிறேன் என்றுதான் அர்த்தம்!’’

அவருடன் நண்பர்களாக இருந்த மன்னர்களில் கேத்ரி என்ற மன்னர் குறிப்பிடத்தக்கவர். இவருடன் விவேகானந்தர் தங்கியிருந்தபோது அரசு நிகழ்ச்சியாக ஒரு நாட்டியம் நடைபெற்றது. தனது பிரம்மசார்யத்துக்கு அதுபோன்ற நாட்டிய நிகழ்ச்சியைக் காண்பது இழுக்கு என்று கருதினார் விவேகானந்தர்.

நடனப் பெண்மணியையும் அவளுடைய அசைவுகளையும் கண்டால் தன் மனம் பேதலிக்கும் என்று அவர் நினைத்தார். ஆகவே நடனம் துவங்கியதும் அவர் அந்த மண்டபத்தை விட்டுப் புறப்பட யத்தனித்தார். ஆனால், மன்னர் அவரைத் தடுத்து சிறிது நேரமாவது இருந்து நாட்டியத்தைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு வேண்டிக்கொண்டார்.

அன்றைய தினம், விவேகானந்தரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய தினம் என்றே சொல்லலாம். அந்தப் பெண் நாட்டியமாடியதைவிட அவள் எந்தப் பாட்டிற்காக ஆடினாளோ அந்தப் பாடலின் கருத்துதான் அவருடைய மனதில் புதுத் தத்துவத்தை உயிர்ப்பித்தது.

‘என்னிடம் நிறைய தீய குணங்கள் இருக்கலாம், ஆனால், இறைவனே அவற்றைப் பெரிதாக நினைக்காதே உனக்கு முன்னால் அனைவரும் சமம். இரும்பு, கோயிலில் உன் விக்கிரகமாக இருக்கிறது. அதே இரும்பு, கசாப்புக்கடைக்காரனின் கரத்தில் இயங்கி பல பிராணிகளின் உயிரை வாங்குகிறது.

என்னைப் படைத்தவன் நீ. என் தீய குணங்களுக்கு முக்கியத்துவம் தராதே,  என்னை ஆட்கொள், இறைவா’ என்ற பொருள் தரும் சூர்தாஸின் பாடல் அவருக்குத் தெளிவைத் தந்தது. எல்லாமே பிரம்மம்தானே!

இதில் நடனப் பெண் யார், நான் யார்? நானும் பிரம்மமாகி, அவளும் பிரம்மமாகி இருக்கும்போது யார், யாரை பாதிக்க முடியும்? எனக்கு எப்படிச் சலனம் உண்டாக்க முடியும்?’ என்று தீவிரமாக சிந்தித்தார்.முதலில் தான் அந்த நடனத்தைப் பார்க்க முடியாது; பார்த்தால் சலனப்பட்டு விடுவோம் என்று கருதியதற்காக வெட்கமடைந்தார்.விவேகானந்தரின் இந்த மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்த கேத்ரி மன்னர்தான் அதுவரை நரேந்திர தத்தராக இருந்தவரை விவேகானந்தர் என்று அழைக்க ஆரம்பித்தார்.

ஷீர்டி சாயிபாபா

மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடியது. ஷீர்டி கிராமமும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது. வீடு கட்டி வாழ்ந்தவர்கள் எல்லாம், மழைக்கும், வெள்ளத்திற்கும் புகலிடம் கொண்டவர்கள் எல்லாம் ஒரே ஒருவரைப் பற்றி மிகவும் கவலைப்படத் துவங்கினார்கள். அவர் - பாபா.எந்தக் குடிலும் அமைத்துக் கொள்ளாமல், யார் வீட்டிலும், அடைக்கலம் கோராமல் தனியே ஒரு வேப்ப மரத்தடியில் வாழ்ந்த பற்றற்ற மகான் அவர். தனக்கு எதுவும் தேவையில்லாதவராக இருந்தாலும், ஊரார் பிணிகளைத் தீர்த்து வைக்க அவர் தவறியதில்லை.

இயல்பாகவே அனைவருக்கும் உதவும் அவருடைய குணத்திற்கு ஆன்மிக வலுவும் சேர்ந்து கொண்டதால் மக்கள் உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் எதுவுமின்றி வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் எல்லாம் அந்தக் காலத்து மனிதர்கள். அதனாலேயே நன்றிக்கடன் நிறைய பட்டவர்கள்.

தம்மை உய்வித்து வரும் ஒரு மகான், தாம் எவ்வளவோ வற்புறுத்தியும் தனக்கென தனிக்குடில் எதுவும் அமைத்துக்கொள்ளாத மகான், இந்த மழையிலும் வெள்ளத்திலும் எப்படிப் பரிதவிக்கிறாரோ என்று அவர்கள் அஞ்சினார்கள். அவர்மீது அன்பு கொண்ட சிலர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வேப்ப மரத்துக்கு ஓடோடிச் சென்றார்கள்.

அங்கே மரத்தில் சாய்ந்தபடி தவ நிலையில் அசையாது அமர்ந்திருந்தார் பாபா. வெள்ள நீர் அவரைச் சூழ்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைக் கூளங்கள் எல்லாம் அவர் மேனி மீது அப்பியிருந்தன.அவருடைய சமாதி நிலையைப் பார்த்து பிரமித்த மக்கள், அவரை எழுப்ப மனமில்லாமல்  திரும்பிச் சென்றார்கள்.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு மழை நின்றது. வெள்ளம் வடிந்தது. மக்கள் ஓடோடி வந்து பாபாவைப் பார்த்தார்கள். பாபா கீழே சாய்ந்திருந்தார். அவர் மீது மணலும், வெள்ளக் கசடுகளும் மூடியிருந்தன. ஆமாம், அப்போதும் அவர் தியானத்தில்தான் இருந்தார். மக்களெல்லாம் அவரை எழுப்பி, சுயநினைவுக்குக் கொண்டு வந்து அழைத்துச் சென்றார்கள்.

அந்த ஊரில் இருந்த பாழடைந்த மசூதியில் அவரை அமரச்செய்து, அங்கேயே தங்கி வரும்படி கேட்டுக்கொண்டார்கள். ‘‘இந்த  ஒண்டிக்கட்டைக்குத் தங்குவதற்கு இடமெல்லாம் எதற்கு? நான் மரத்தடியிலேயே தங்கிக் கொள்கிறேன். அதுபோதும்,’’ என்று பெரிதும் மறுத்தார் பாபா. ஆனால்,  மக்கள்தான் வற்புறுத்தி அவரை அங்கே தங்கச் செய்தார்கள்.

தன் சக்தியை உணராதவராக உணர விரும்பாதவராக இருந்தார் பாபா. அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவர் நிழல்பட்டு, பட்டுபோன செடிகள்கூட துளிர்த்தன. அவருடைய பார்வையாலேயே பல நோயாளிகள் குணம் பெற்றார்கள். நியாயமான, தேவைக்கு ஏற்ற வசதிகளைப் பெற்றார்கள்.

1820-1850 ஆண்டுகளில் ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர் பாபா. யாருமே இந்த ரிஷிமூலத்தை வரையறுத்துச் சொல்லவில்லை என்றாலும் பாபாவே ஓரிரு சமயங்களில்  இலை மறைவு காய்மறைவாகச் சொன்ன தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் தகவல்கள்தான் இவை.

வறுமை காரணமாகத் தம் குழந்தையை வளர்க்க இயலாத பெற்றோர்கள் அவரை ஒரு  முகமதியரிடம் ஒப்படைத்தார்கள். நிஜாம் மன்னரின் பாதிரி என்ற கிராமத்தில் இவ்வாறு தம் பால்ய வாழ்க்கையைத் துவங்கிய பாபா, தன்னுடைய ஐந்து வயதுவரைதான் அந்த முகமதியரின் பராமரிப்பில் வாழ முடிந்தது.

பெரியவர் இறந்துவிடவே, அந்த ஊர் பாணயக்காரர்கோபால்ராவ் தேஷ்முக் என்பவரின்பொறுப்பில் வாழ்க்கையைத் துவங்கினார்.

கோபால்ராவ் திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர். பள்ளிக்குச் சென்று படிக்காவிட்டாலும் சிறு வயதிலிருந்தே தன் வளர்ப்புத் தந்தையின் அடிச்சுவட்டில் ஆன்மீக ஞானம் வரப்பெற்றார் பாபா

No comments:

Post a Comment