Tuesday, January 23, 2018

யஜுர்வேதம்- கர்ப்போபநிஷதம்


-

-
3. ருதுகால சம்போகத்தால் ஓரிரவு கழிந்ததும் கருவானது கலங்குகிறது. ஏழிரவுகளில் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
-
அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது கடினமாகிறது. இரண்டு மாதங்களில் தலை தோன்றுகிறது. மூன்று மாதங்களில் பாதங்களின் பகுதிகள் தோன்றுகிறது.
-
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன. ஐந்தாவது  மாதத்தில் முதுகு உட்பட பின்புறம் எலும்பு உண்டாகிறது.ஆறாவது மாதத்தில் வாய் மூக்கு கண்கள் காதுகள் உண்டாகின்றன.
-
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன் கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன. தந்தையின் வீர்யம் அதிகமாக இருந்தால் புருஷனாகவும்,தாயின் வீர்யம் அதிகமாக இருந்தால் பெண்ணாகவும்,இரண்டும் சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது. மனக்லக்கம் ஏற்பட்டால் குருடர்களாகவும்,கூனர்களாகவும்,முடவர்களாகவும் பிறக்கிறார்கள். ஒன்றுக்கொன்று வாயுவால் பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டு பட்டால் இரட்டைப்பிள்ளைகள் பிறக்கின்றனர்.
-
பஞ்சபூத வடிவான சரீரம் ஸாமர்த்தியமாகும் போது ஐந்து ஞானேந்திரியங்களும் புத்தியும் அதனால் கந்தம்,ரஸம்,முதலியவற்றை அறியும் திறமையும் உண்டாகின்றன. அப்போது அந்த ஜீவன் அழியாத அக்ஷரமாகிய ஓங்காரப்பொருளை சிந்திக்கிறான். அந்த ஓரெழுத்தை உணர்ந்ததும் (பஞ்சபூதங்களும், மனம்,புத்தி,அகங்காரம்) என்ற எட்டு பிரகிருதிகளும் அவற்றின் பதினாறு விகாரங்களும் தேகத்தில் அதை உடைய தேகியாகிய ஜீவனுடையவை ஆகின்றன என்பதும் உணரப்படுகிறது.
-
தாயார் உண்டதும் பருகியதும் தாயுடன் இணைந்த நாடிகளில் பரவி அதன்மூலம் குழந்தையின் பிராணன் திருப்தியடைகிறது. பிறகு ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும் ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் பரிபூரண நிலையை எய்துகின்றன. அப்பொழுது அந்த ஜீவனுக்கு முந்திய பிறவி ஞாபகம் உதிக்கிறது. தான் செய்த புண்ணிய செயல்களையும் பாவச் செயல்களையும் உணர்கிறது
-
4. என்னால் முன்பு ஆயிரக்கணக்கான யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான ஆகாரங்கள் புசிக்கப்பட்டும் பலவிதமான தாய்ப்பால் பருகப்பட்டும் ஆகிவிட்டது. திரும்பத்திரும்ப பிறந்தும் இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ எந்த கருமம் எந்தச் சுற்றத்தின் பொருட்டு என்னால் செய்யப்பட்டதோ அந்தச் சுற்றத்தார் பயனை அனுபவித்துப்போய்விட்டார்கள். நானோ தன்னந்தனியனாக அதனால் தவிக்கிறேன்.
-
யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தைப் போக்குபவரும் கருமப்பயனிலிருந்தும் முக்தியளிப்பவருமான  மகேஷ்வரனை நாராயணனை சரணடையப்போகிறேன். யோனியினின்று வெளிவந்தால் இனி நான் பாவத்தை போக்குவதும் கர்மபந்தத்திலிருந்து விடுதலை அளிப்பதுமாகிய ஸாங்கிய யோகத்தை (துறவு மார்க்கத்தை) பின்பற்றப்போகிறேன்.யோனியிலிருந்து வெளிவந்தால் பிரம்மத்தை தியானிக்கப்போகிறேன் என்று எண்ணுகிறான்
-
பிறகு யோனித்துவாரத்தை அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்பட்டவனைப்போல் மிகுந்த துன்பத்திற்குள்ளாகிப் பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால் தொடப்பட்டு அப்பொழுது நினைவிழந்து முந்தைய பிறப்புகளை மறக்கிறான்.புண்ணிய பாவச் செயல்களை மறக்கிறான்.
-

No comments:

Post a Comment