Monday, March 27, 2017

ஆறாவது அறிவு


============

"ஆறாவது அறிவு^ எது?

"பகுத்தறிவு என்பார்கள்"

"பகுத்தறிவு என்றால் என்ன?"

"நல்லது, கெட்டதை பிரித்து அறிவது என்று விளக்கம் சொல்வார்கள்"

"இதற்கு மேல் நமக்கு கேட்கவும் தெரியாது, விளக்கவும் தெரியாது. மேற்கொண்டு கேட்டால் விதண்டாவாதம் என்பார்கள்"

ஒரு மாட்டுமந்தையில் ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் கூட, கன்றுக்குட்டி தன்னுடைய தாய்ப்பசுவை தன் புலனுணர்வு மூலம் சரியாக அடையாளம் கண்டு கொள்கிறதே? எதை உண்ண வேண்டும் என்று தெரிந்து கொள்கிறதே?

இப்படி நிறைய சொல்லலாம். இதுதான் பகுத்தறிவா?

இல்லை. இவையெல்லாம் புலனறிவும், அதன் துணை கொண்டு பெற்ற அனுபவ அறிவும் ஆகும்.

"பகுத்தறிவு என்பது ஒன்றின் மூலத்தை அறிவது ஆகும்."

"காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்" என்றாரே பாரதி.

கூட்டம் என்று பாரதி குறிப்பிட்டது அணுக்களின் கூட்டம் ஆகும்.

எந்த பொருளையும் பகுத்துக் கொண்டே சென்றால் இறுதியாக மிஞ்சுவது அணுவே.

இப்போது நம்முடைய விளக்கத்திற்கு வருவோம்.

நம்முடைய "மனம்"நம்மிடம் இயங்குகிறது.
இந்த மனதின் மூலம் எது? என்று பகுத்து ஆராய்ந்தால், "மனதின் மூலம் உயிர்" ஆகும். அதாவது நம் உடலில் சுழன்று கொண்டிருக்கும் கோடானகோடி உயிர்த்துகள்களின் தற்சுழற்சியால் தோன்றும் அலைகளின் தொகுப்பு மனமாகவும் இயங்குகிறது. அதாவது உயிரின் அலையே மனம் எனப்படும்.

"இந்த உயிரின் மூலம் எது?"என்று பகுத்து ஆராய்ந்தால் "உயிரின் மூலம் இறைவெளி" ஆகும்.

இறைவெளி என்பது என்ன?

இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் காணுகின்ற அனைத்து உயிரினங்கள் உட்பட, எல்லா தோற்றங்களுக்கும் மூலமாக இருப்பது எதுவோ? அதுதான் "இறைவெளி"என்று அழைக்கப்படுகிறது.

நாம் கூறும் இறைவெளிதான்,
*GOD
*SPACE
*ALMIGHTY
*பேராற்றல்
*பேரறிவு
*சிவம்
*சக்தி
*சுத்தவெளி
*வெட்டவெளி
*இயற்கை
*இறைவன்
*கடவுள்
*தெய்வம்
*ஆண்டவன்
*அருட்பெருஞ்சோதி
*அல்+இலாஹ்=அல்லாஹ்
*கர்த்தர், பிதா

என்றவாறு "ஒரே மூல ஆற்றலை" அவரவர் மொழியில் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றார்கள்.

ஆக, "ஆறாவது அறிவு" என்பதன் சிறப்பு யாதெனில் ஒன்றை பகுத்து ஆராய்ந்து, அதன் "மூலத்தை கண்டறிவது"ஆகும்.

இவர்கள் தாம் உண்மையான "பகுத்தறிவாளர்கள்".

இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்களை தான் தமிழர்கள் ஞானிகள்,சித்தர்கள்,அறிவர்கள், யோகிகள்,மகான்கள், என்று அழைக்கின்றனர்.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment