Monday, March 27, 2017

சுலபமான இயற்கையான மூச்சு


========================

மூச்சின் சக்தியை அனுபவிக்க நாம் மூச்சுடன் ஒன்றி இருத்தில் வேண்டும்! அது எப்படி? இதோ அதற்கான உபாயம். மிக நீண்ட அல்லது மிகக் குறுகிய மூச்சுகளைத் தவிருங்கள். சாதாரண, இயல்பான, இயற்கையான மூச்சு போதும்.

இப்படி இயற்கையான, இயல்பான, சுலபமான மூச்சோடு நாம் ஒன்றியிருக்கும் போது, மெல்ல, மெல்ல எண்ணங்கள் குறைந்து, குறைந்து இறுதியில் மறைந்தே போகும்! மனம் வெற்று மனமாகும். அப்படி மனம் வெற்றிடமாகும் போது, அங்கு பிரபஞ்ச சக்தி வெள்ளமெனப் பாயும். நிரம்பி இருக்கும் இடத்தில் எதுவுமே புக முடியாது ஆனால் வெற்றிடத்தில் வெள்ளமெனப் பாயும், பிரபஞ்ச சக்தி! மனம் பேரொளியில் நிரம்பித் ததும்பி வழியும். அக்கணம்... நமது ’மூன்றாம் கண்’ திறந்து கொண்டு செயல்படத் துவங்கும். அந்த அற்புத அனுபவத்தில், நாம் நமது ஆத்ம விழிப்பை, அதன் சக்தியைப் பரிபூரணமாக உணர்ந்து அனுபவிக்கலாம்.

தியான விஞ்ஞானம்

நம்து இரு புறக்கண்கள் போலவே அகத்திற்கென ஒரு கண் உண்டு. அதுவே நமது மூன்றாம் கண். நமது பெளதீக உடல் போலவே சூட்சும உடல் என்று ஒன்றுண்டு. புறக்கண்களும் பெளதீக உடலும் நமது உலகாய வாழ்வுடன் சம்பந்தப்பட்டது. உலகியல் உணர்வுகள் சார்ந்தது. ஆனால், நமது மூன்றாம் கண் பார்வை நமது ஆத்மசக்த்தியை, உள்ளே உறைந்திருக்கும் இறையை நமக்குக் காட்டிக் கொடுக்கும்! சூட்சும உடலோ நமது ஆன்மிக வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்தும். அப்போதுதான் நாம் உணர்வோம், நமது இத்தனை நாள் வாழ்வு வாழ்வல்ல! இப்போது காணும் வாழ்வே வாழ்வென்பதை! இத்தனை அற்புத அனுபவங்களும் இயல்பான சுவாசத்தை மட்டும் கவனிக்கும் ’ஆனாபானசதி’ தியானத்தால் மட்டுமே சாத்தியம்! சாத்தியம்!!

இவ்வாறாக நாம் நமது முழு மற்றும் சிதறாத கவனத்தை, மூச்சின் மேல் செலுத்தும்போது அதுவே தியானம் என்றழைக்கப்படும் ’தவம்’ ஆகிறது. இத்தியானத்தைத் தொடர்ந்து பழகும்போது நாம், ஆன்மிக விஞ்ஞான தியானத்தில் சிறந்த, பரிபூரணமாகிறோம், பரிபக்குவ நிலையை, அதாவது முழுமையை அடைகிறோம்.

ஆன்ம விஞ்ஞானம்

தியானத்தின் மூலமாக நாம் நமது கடந்த மற்றும் எதிர் காலங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். நமது கடந்த காலத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்வதால், நாம் பல பிறவிகள் தாண்டி வந்திருப்பதை உணர்கிறோம். உயர்ந்த / தாழ்ந்த மற்றும் பல பிறவிகளைக் கடந்து வந்திருப்பதை உணர்கிறோம்.

எனவே, மாறி மாறி எடுத்த உடல்கள் பெரிதல்ல. மாறாமல் நம்முடனே வந்து கொண்டிருக்கும் ஆன்மாவே பெரிதென்று அறிகிறோம். "அயமாத்மா ப்ரம்மா" "அஹமாத்மா ப்ரம்மா" "தத்வம்ஸி" (நான் பிரம்மனாக இருந்தேன்.. நானே பிரம்மனாக இருக்கிறேன்.. நானே பிரம்மா) என்று படிப்படியாக உள்ளே உறைந்திருக்கும் இறை உணரும் செயல் நடக்கிறது என்பதை அறிகிறோம். ’நாமே எல்லாம்’, நாம் அழிவற்றவர்கள் என்பதை உணர்கிறோம். பல்வேறு பிறவி பெளதிக உடல்களின் இறப்பு நிகழ்ந்தாலும், மாறாத ஆன்மாவின் வளர்ச்சியே நமது உண்மையான வாழ்வென்பதை அறிகிறோம்!

இப்பாடமே 'ஆன்ம விஞ்ஞானம்' என்பதாகும்.

ஆன்மிகம்

சுவாச சக்தி மூலமாக நாம் தியான விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்கிறோம். தியான சாஸ்திரம் என்பது அதுவே. அந்த தியான சாஸ்திரம் மூலமாகவே நாம் ஆன்ம சாஸ்திரம் என்கிற ஆன்ம விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்கிறோம்.

ஆன்ம விஞ்ஞானத்தை நன்கு கிரகித்துக் கொண்ட பிறகே நாம் நமது தினசரி வாழ்வு பற்றியும், வாழ்தல் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படைக் கூறுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்... எப்படிப் பேசுவது... எப்படி சாப்பிடுவது... எப்படி வளர்வது... எப்படி தொடுவது.. எப்படி நடப்பது... இப்படி தினசரி நாம் செய்யும் பல செயல்களைப் பற்றி சரியாகப் புரிந்து அதன்படி நடக்க முடியும். இதுநாள்வரை இதெல்லாம் செய்திருக்கிறோம் தான்! ஆனால் அதன் நுணுக்கங்கள்... சரியான வழிமுறைகள் பற்றித் தெரிந்து கொள்ள ’ஆன்ம விஞ்ஞானக் கற்றல்’ மிக மிக அவசியம்!

இதுதான் ’பரிபூரண பரிபக்குவத் தன்மை’ (Enlightenment) அதாவது முழுமை (Perfection) இதைத்தான் ’ஆன்மிகம்’ என்கிறோம்.

No comments:

Post a Comment